அரிமாக்களின் வேட்டை!
அத்தியாயம் 30
'Do you think destiny is pre-written or do we make our own destiny?'
இந்தியாவின் பொழுதுபோக்கு நகரான மும்பையின் ஆடம்பரமான இடங்களில் பாந்த்ராவும் ஒன்றாகும்.
புறநகர்ப் பகுதிகளின் ராணி என்று விவரிக்கப்படும் பாந்த்ராவில் கோடீஸ்வரர்கள் மற்றும் பிரபலமானவர்கள் வசிக்கும் ஒரு உயர்தரக் குடியிருப்பு பகுதி அது.
அங்கு வசிக்கும் பிரபலங்கள் ஏராளம்.
ஷாருக்கான், சல்மான் கான், அமிர் கான், சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்களின் மத்தியில் தனது கோட்டையைக் கட்டியிருந்தார் சிதாராவின் தந்தை முகேஷ் சௌகான்.
அன்று அக்கோட்டை மலர்களாலும், மாவிழைத் தோரணங்களாலும், சீர் வரிசைத் தட்டுகளாலும் களைக்கட்டியது.
எத்தனையோ சந்தோஷங்களையும், ஆனந்தத்தையும் சுமந்துக்கொண்டு, கலகலப்பான பேச்சுக்களோடும் மகிழ்வான முகத்தோடும் ஆண்களும், பட்டாடைகளும் நகைகளும் அணிந்து கொண்டு பெண்களுமாய் அவ்வீடு முழுவதிலும் குழுமியிருந்தனர்.
ராஜபுத்திர வம்சாவளியினரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுமாய் அனைவரும் கலந்து வந்திருந்தனர் அவ்விழாவிற்கு.
ராஜஸ்தானி மொழியில் ராஜபுத்திர வம்சத்தினரும், முகேஷ் சௌகானின் நண்பர்களும் அரசியல் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியிலும் பேசிக் கொண்டிருந்தனர் என்றால், அழகிய தமிழில் நம் ஊரைச் சேர்ந்தவர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர்.
வழக்கமாகக் கணவனின் பெற்றோர் வீட்டில் நடக்கும் விழாவினை தன் வீட்டில் வைக்க வேண்டும் என்று முகேஷ் சௌகான் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முதலில் மறுத்த ஷிவா வேறு வழியின்றி மனைவிக்காக விட்டுக் கொடுத்திருக்க, நல்ல நேரம் துவங்கவும் ஸ்மித்தா சௌகான் மற்றும் சாவித்திரியின் சொற்படி கல்கண்டு, தேங்காய், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை என்ற சீர்வரிசை தாம்பூலங்களுடன் வண்ண வண்ண கண்ணாடி வளையல்களையும் தட்டுகளில் அடுக்கி பெண்கள் கொண்டு வந்து வைக்க, வீடு விழாக்கோலம் பூண்டது.
ஆரஞ்சு நிறம் மற்றும் மஞ்சள் நிற ரோஜா மலர்களையும் சாமந்திப் பூக்களையும் கொண்டு அக்கோட்டையே அலங்கரிக்கப்பட்டிருக்க, அடர் சிகப்பு நிற பட்டுப்புடவையில் தங்கச் சரிகை இழையோட ஏழு மாதக் கர்ப்பத்துடன் தன் வளைகாப்பிற்குத் தயார் ஆகிக் கொண்டிருந்தாள் சிதாரா.
"இந்தப் புடவை உன் கலருக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு சிதாரா. செம்ம அழகா இருக்க. இன்னைக்கு வளைகாப்பு முடிஞ்சதும் நானே உனக்குத் திருஷ்டி சுத்திப் போட போறேன்."
கூறிய துர்காவின் முகத்தை நிமிர்ந்து நோக்கிய சிதாராவிற்குத் தோழியின் வார்த்தைகளில் மகிழ்ச்சி உண்டானாலும், அவள் வாழ்க்கையை நான் பறித்து விட்டேனோ என்ற குற்ற உணர்ச்சி இன்றும் கொன்றதில் இதழ்களில் வெறுமையான ஒரு புன்னகையை மட்டுமே சிந்தினாள்.
எப்பொழுது தன்னைப் பார்த்தாலும் இதே போன்ற ஒரு வெற்றுப் பார்வைப் பார்க்கும் தோழியைக் கண்டு வருத்தமுற்ற துர்கா அவளின் தாடையைப் பற்றியவாறே,
"இவ்வளவு நாளாகியும் நானே மறந்துப் போன விஷயங்களை நீ இன்னமும் மறக்கலைங்கிறது தான் எனக்குப் பெரிய வருத்தமே சிதாரா.." என்றாள்.
அவளின் கூற்றினைக் கேட்ட சிதாராவிற்கு மீண்டும் வருத்தம் ஓங்கியதே ஒழிய வடிந்தப்பாடில்லை.
"ம்ப்ச், என்ன சிதாரா, இப்படிக் கண்கலங்குற? அதுவும் இது மாதிரி நல்ல நாளில்."
"நீ மறந்துட்டேன்னு சொல்ற, ஆனால் மறக்கலைன்னு எனக்குத் தெரியும் துர்கா."
"ஹேய், அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைப்பா."
"அப்படின்னா நான் எத்தனையோ தடவை கேட்டும் ஏன் நீ சரியா பதில் சொல்ல மாட்டேங்கிற துர்கா?"
"எனக்குத் தெரிஞ்சு நீ கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் நான் பதில் சொல்லிட்டேன்."
"சொல்லிட்ட தான், இல்லைன்னு சொல்லலை.. ஆனால் அந்த ஒரு கேள்விக்கு மட்டும் இது வரை நீ உண்மையான பதில் சொல்லலை.."
"...."
"என்ன இதுக்கு மட்டும் சைலண்டா ஆகிட்ட?"
"...."
"எல்லாத்தையும் மறந்துட்டேன்னு சொல்றவ இதுக்கு மட்டும் பதில் சொல்லலைன்னா, அப்போ நீ இதை மட்டும் மறக்கலைன்னு தான அர்த்தம்?"
"...."
"தெரியும், நீ எப்பவும் இதுக்குப் பதில் சொல்ல மாட்டன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் அதே கேள்வியை நான் திரும்பத் திரும்பக் கேட்காம விடமாட்டேன். சொல்லு. உனக்கும் வருணுக்கும் இடையில்.."
அவள் முடிக்கும் முன்பே அறைக்கதவைத் திறந்து கொண்டு வந்த ஷிவாவின் அன்னை சாவித்திரி, "எல்லாரும் வந்துட்டாங்கம்மா. நல்ல நேரமும் துவங்கியாச்சு, போகலாமா?" என்றதுமே துர்காவிடம் இருந்து ஆசுவாச பெருமூச்சு வெளிவந்தது.
அதனை யார் கவனித்தாலும் கவனியாவிட்டாலும், சிதாராவும் அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த துர்காவின் அன்னையும் கவனித்தார்கள்.
ஆயினும் அதற்கு மேல் பேச நேரமில்லாது மாமியாருடன் இணைந்து வீட்டின் கீழ் தளத்தில் வளைகாப்பிற்கு என்று அலங்கரிக்கப்பட்டிருக்கும் பொது அறைக்குச் சென்றாள் சிதாரா.
காலை மணி பதினொன்று.
"நல்ல நேரம் ஆரம்பிச்சிடுச்சும்மா, நீ மனையில உட்கார்.."
சாவித்திரி கூறவும், பச்சரிசி பரப்பி விடப்பட்டிருக்க, அதன் மேல் வெற்றிலை பாக்கு, பழம், மஞ்சள் மற்றும் மல்லிகை பூக்கள் கொண்ட தட்டுகளும் வைக்கப்பட்டிருக்க, அதற்கு அருகில் கிழக்கு நோக்கி போடப்பட்டிருந்த மனையில் அமர்ந்தாள் சிதாரா.
அவளுக்கு எதிரில் முக்காலியில் பன்னீர் சொம்பு, குங்குமம், மஞ்சள், சந்தனம், அருகம்புல் கட்டு, பச்சரிசியில் மஞ்சள் தடவப்பட்ட அட்சதை, உதிரி மல்லிகைப் பூக்கள் கொண்ட தாம்பூலங்களும், அதற்கு அருகில் ஆலம் சுற்ற ஆரத்தி தட்டும் வைக்கப்பட்டிருந்தது.
சிகப்பு மஞ்சள் பச்சை நீலம் ஆகிய நிறங்களில் வளையல்கள் தட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, சீமந்தம் துவங்கியது.
சிதாராவிற்கு அத்தை முறைக் கொண்ட பெண்மணி ஒருவர் அவளின் கைகளிலும் கன்னங்களிலும் சந்தனம் பூசிவிட்டவர், குங்குமத்தை நெற்றியிலும் வகிட்டிலும் வைத்தார்.
பிறகு பன்னீர் தெளித்து அட்சதையைத் தூவியவராய் வளையல்களை இடத் துவங்க, அவரைப் பின் தொடர்ந்து பெண்கள் அனைவரும் நலுங்கு வைத்தவர்கள் கர்ப்பிணிப் பெண்ணவளுக்கு வளையல்களைப் பூட்டத் துவங்கினர்
இரு பக்கமும் ஐந்து முகங்களிலும் நெய் ஊற்றி சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த குத்துவிளக்கிற்கு நடுவில் அமர்ந்திருந்த மனைவியின் அழகு பேரெழிலாய் அந்த அறை முழுவதையுமே ஆட்கொண்டது போன்று தோன்றியது, சற்றுத் தொலைவில் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஷிவாவிற்கு.
அவ்வப்பொழுது கணவனை ஏறிட்டு நோக்கியவள், திருமணம் முடிந்த நாளில் இருந்து எத்தனையோ முறை வற்புறுத்தியும் தன் பெற்றோரின் வீட்டில் காலடி எடுத்து வைக்கமாட்டேன் என்று பிடிவாதத்துடன் இருந்தவன் முதன்முறையாக விட்டுக்கொடுத்து தந்தையின் வீட்டிற்கு வந்திருப்பதில் பெருத்த நிம்மதியும்,
அத்துடன் தன்னை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருப்பதில் கர்வம் கலந்த நாணமும் வந்து குடியேறியதில் சிறு புன்சிரிப்புடன் தலைகவிழ்ந்து கொள்ள, அடங்கா காதலுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஷிவாவையே திடுக்கிடச் செய்தது, திடுமெனக் கேட்ட அந்த ஓசை.
பரந்து விரிந்திருக்கும் அந்தப் பெரிய மாளிகையின் நடுவறையில் வளைகாப்பு நடைபெற்றுக் கொண்டிருக்க, வீட்டைச் சுற்றிலும் காவல்பணியில் நடமாடிக் கொண்டிருந்த காவலர்களையும் மீறி வீட்டினுள் புயலென நுழைந்தான் வருண்.
"சார், ப்ளீஸ். விசேஷம் நடந்திட்டு இருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நான் SSP சாரிடம் பெர்மிஷன் கேட்டுட்டு வரேன்.."
எவ்வளவோ முறை அன்றைய காவல் பணிக்குத் தலைமை வகிக்கும் காவல் அதிகாரிக் கூறியும் அடங்க மறுத்தவனாய் வீட்டின் முன்னறைக்குள் நுழைந்தவனின் சத்தத்தில் சாவகாசமாய்த் திரும்பினான் ஷிவா.
அங்குத் தயவுதாட்சண்யம் இன்றித் தனக்கு எதிரில் வருபவர்களை ஒரு கையால் பிடித்துத் தள்ளியவனாய், ஜாஃபரும் அடியாள் ஒருவனும் பின் தொடர, அதிரடியாய் நடந்த வருபவனின் ராட்ஷச வேகத்தில் அவனது கோபத்தின் அளவு ஷிவாவிற்குப் புரிந்து போனது.
இது எதிர்பார்த்தது தான்!
ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் நடைபெறும் என்று நினைத்திராததில் முதலில் சற்று யோசித்தவன் பின் காவலர்களை நோக்கி வருணிற்கு வழிவிடுமாறு கையசைத்து கட்டளைப் பிறப்பித்தான்.
சட்டென இரு பக்கங்களுமாய் அவர்கள் நகர்ந்து நிற்க, அவர்களுக்கு நடுவில் விடுவிடுவென நடந்து வந்த வருண், அறைக்குள் குழுமியிருந்த அனைவரையும் அசட்டை செய்தவனாய் ஷிவாவை பொசுக்கிவிடுவது போல் பார்த்தவாறே அவனை மிக நெருங்கி நின்றான்.
"நீ வருவன்னு எனக்குத் தெரியும் வருண். ஆனால் இன்னைக்கே வருவன்னு எதிர்பார்க்கலை. பட், இது உனக்கும் எனக்கும் சர்வ சாதாராணம் தானே. உனக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் போது நான் வந்து குறுக்கிட்டேன். எனக்குக் கல்யாணம் நடக்கிற அன்னைக்கு நீ வந்து என் கல்யாணத்தை நிறுத்திட்ட. இன்னைக்கு என் வைஃபுக்கு வளைகாப்பு நடந்துட்டு இருக்கு, சொல்லி வச்ச மாதிரி நீ வந்துட்ட. Anyways, உன் வாழ்க்கையில் நடக்கும் முக்கிய விசேஷத்தை நான் தடை செய்யறதும், என் வாழ்க்கையில் நடந்துட்டு இருக்கிற விசேஷங்களை நீ தடுக்கிறதும் சகஜம் தானே."
கூறிய ஷிவா சிறிய சிரிப்புடன் தொடர்ந்தான்.
"நமக்குள்ள என்ன மாதிரியான சந்திப்புகள் நிகழுதுப் பார்த்தியா வருண்? Do you think destiny is pre-written or do we make our own destiny Varun?"
ஷிவாவின் நக்கல் சிரிப்பு, அகோர கோபத்தில் உழன்றுக் கொண்டிருந்தவனின் உணர்ச்சிகளை மேலும் கிளறிவிட்டதில் ஆவேசத்துடன் தனது மூச்சுக்காற்று அவனது முகத்தில் வீசுமளவிற்கு நெருங்கி நின்றான் வருண்.
"இதை நீ முன்னாடியே யோசிச்சு இருக்கணும் ஷிவா. அதாவது என் மேல் இப்படி ஒரு அபாண்டமான குற்றச்சாட்டைச் சுமத்துறதுக்கு முன்னாடி."
"எது அபாண்டம்னு சொல்ற வருண்? கொடுமையான போதை மருந்து கண்டு பிடிக்கிறதையா? இல்லை, அதை உலகம் முழுவதும் smuggle [கடத்தல்] பண்றதுக்கான திட்டங்களை வகுக்குற காட் ஃபாதருன்னு உன்னைச் சொல்றதையா?"
ஏறக்குறைய வருணுக்கு மட்டுமே கேட்குமளவிற்கான குரலிலேயே ஷிவா கூறினான்.
"ஷிவா, திரும்பவும் சொல்றேன். அதுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை."
"ஃப்லேமிங் வெர்மிலியன் [Flaming Vermilion] உன்னுடைய கம்பெனி தானே வருண்?"
"ம்ப்ச்.." என்று சலித்துக் கொண்ட வருண், "ஆனால் அதுக்கும் நீ சொல்ற அந்தப் போதை மருந்துக் கடத்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை." என்றான் எரிச்சல் கூடிய குரலுடன்.
"அதை விசாரணையின் முடிவில் தெரிஞ்சிக்குவோம் வருண். ஆனால் அதன் முடிவு தான் ரொம்பக் கொடுமையா இருக்கும். அதாவது விசாரணையின் முடிவில் தான் உன் முடிவிற்கான துவக்கமும் இருக்கு. ஐ மீன் தேஸாய் குரூப்ஸின் முழு அழிவும் என்னுடைய என்கொயரி ரிப்போர்டில் தான் இருக்குன்னு சொல்ல வரேன்."
ஷிவா கூறியதுமே ராட்ஷச வேகத்தில் எகிறிய கோபத்துடன் அவனது சட்டைக் காலரை விருட்டென்று இழுத்துப் பிடித்தான் வருண்.
"நீ நேத்து பிறந்தவன் ஷிவா, ஆனால் எங்க தேஸாய் குரூப்ஸ் பல வருடங்களுக்கு முன்னால் விதைகளாய் போடப்பட்டு விருட்சங்களாய் வளர்ந்து, இப்போ ஒரு அடவியாய் நிற்குது. அதுல ஒரு கிளையைக் கூட உன்னால் உடைக்க முடியாது. உடைச்சா நீ இல்லாமல் போயிடுவ."
தன் சட்டைக்காலரை இறுக்கிப் பிடித்திருக்கும் அவன் கரங்களின் மேல் தன் கரத்தை இலகுவாகப் பதித்த ஷிவா, "பார்ப்போமா வருண்?" எனவும், "பார்ப்போண்டா. நீயா நானான்னு பார்த்திருவோம். ஆனால் அதன் முடிவில் நீ உயிருடன் இருக்க மாட்ட, அதையும் தெரிஞ்சுக்கோ." என்று அடித்தொண்டையில் சீறியவனின் கண்கள், ஷிவாவிற்குப் பின் புறமாக இருந்த மாடிப்படிகளின் மீது படிந்தன.
அங்கு அதிர்ந்த முகத்துடன், மருண்ட விழிகளுடன் தன்னையே பார்த்தவாறே படிகளின் மத்தியில் நின்றிருந்த துர்காவின் கலங்கிய வதனத்தைக் கண்டவனின் உள்ளம் சிதறிப் போனது.
ஷிவாவின் அன்னைக் கேட்டப் பொருள் ஒன்றை மாடியில் இருந்து எடுத்து வருவதற்குச் சென்ற துர்கா, அதனை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் போது வருண் ஷிவாவின் சட்டைக்காலரைப் பிடித்தவாறே சீறிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துப் போய் நின்றிருந்தாள்.
இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று சந்தித்துக் கொண்டன.
வருணின் கண்களில் ஆக்ரோஷமும், தன் எதிரில் நின்றிருப்பவனைக் கொன்று போடும் மூர்க்கமும் இருந்தது என்றால், அவளின் விழிகளிலோ நீர் தளும்பி நின்றிருந்தது.
பல மாதங்களுக்குப் பிறகான சந்திப்பு!
அவளின் கண்ணீரைக் கண்டவன் ஏற்கனவே இறுக்கிப் பிடித்திருந்த காலருடன் ஷிவாவை மேலும் தனக்கு அருகில் இழுத்தவனின் இதயம் பெண்ணவளின் நிலைக்கண்டு துடிக்க, கைகள் தானாகத் தளர்ந்து பின் சட்டைக்காலரை விட்டவன் அவளையே சில விநாடிகள் ஆழ்ந்துப் பார்த்துவிட்டு விருட்டென்று அறையைவிட்டு வெளியேறினான்.
சூராவளியென வீட்டிற்குள் நுழைந்து தன் சட்டையை இழுத்துப் பிடித்துச் சண்டையிட எத்தனித்த வருணின் சீற்றம், தன் அத்தை மகளைக் கண்டதும் தண்ணீரில் அமிழ்ந்த நெருப்பாய் அணைந்துவிட்டதில், ஷிவாவின் புருவங்கள் இடுங்கின.
நிமிடங்களுக்குள் ஒரு பெரும் புயல் அடித்து ஓய்ந்ததைப் போன்று இருக்க, கணவனின் யோசனை முகத்தைப் பார்த்த சிதாரா மனையில் இருந்து எழ எத்தனித்தாள்.
அவளைச் சட்டெனத் தடுத்தவராய், "வேண்டாம்மா, இன்னும் நலுங்கு முடியலை. எழுந்திரிக்க வேணாம்." என்ற முதிர்ந்த வயது பெண்மணியின் குரலில் மனையாளின் புறம் திரும்பினான் ஷிவா.
"நலுங்கை முடிச்சிடுங்க.."
கூறியவன் மனைவிக்குச் சமாதானம் கூறுவது போல் தலையசைக்க, மீண்டும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் துவங்க, ஆனால் அங்குக் கூடியிருந்த அனைவரின் உள்ளங்களிலும் தோன்றிய கேள்வி இதுவே!
'இவங்களுக்குள்ள சண்டை ஓயவே ஓயாதா?'
*********************************
முகேஷ் சௌகானின் வீட்டைவிட்டு வெளியேறிய வருணின் மனமோ ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.
அன்று கட்சிரோலிக் காட்டில், ஆடை விலகியிருக்கும் பேதையின் பேரழகைக் கண்டு மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் வித்தையில் வித்தகன் என்று பெயர் எடுத்திருந்தவன், முதன் முறை பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் மனதிற்குக் கடிவாளமிட முடியாது தடுமாறிப் போயிருந்தான்.
இதே ஷிவ நந்தனைப் பழிவாங்கவென்று அவளைக் கடத்திக் கொண்டு போனவன், இக்கட்டான சூழ்நிலையில் அவளைத் திருப்பி அனுப்பும் பொழுது, கத்தியைக் கொண்டு இதயம் அறுபட்டது போன்று உள்ளுக்குள் துடித்துப் போனான்.
ஆயினும் இத்தனை மாதங்கள் அவளைத் தொடர்பு கொள்ளாது அவன் இருந்ததற்குக் காரணம், அவளுக்கு ஆர்யன் மூலமாக எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என்பதே.
அப்படித்தான் அவன் நினைத்துக் கொண்டான்.
ஆனால் தொழிலவட்டாரங்களிலும், அரசியலிலும், நிழல் உலகத்திலும் கூடத் தன் ஒரு விரல் அசைவிற்கு அடிபணிய மறுப்பவர்களை அடியோடு அழித்துவிடும் சக்திப் பெற்றவனுக்கு, தன் இதயத்தில் வீற்றிருப்பவளைக் காக்கும் சக்தி இல்லாது போய்விடுமா, என்ன?
காலமும் நேரமும் துணிக்கொண்டு துடைத்தெடுத்தது போல் மறைந்து கொண்டிருக்க, தன்னைவிட்டு பிரிந்துச் சென்றவளைக் கண்டு கலங்கிய வருணது உள்ளம் அதற்கடுத்து வந்த நாட்களும் வலியில் மூழ்கி இருந்தது.
அச்சூழ்நிலையில், ஓரிரு முறை தயங்கி தயங்கி ஜாஃபரும், 'ரிஸ்க் எடுக்க வேண்டாம் சார். ஒரு வேளை அந்த ஷிவ நந்தன் துர்காவைத் திருமணம் செய்ய ஒத்துக்கிட்டானா?' என்று கூறியும், தன் வழக்கமான பாணியில் திமிராய்க் கண்டுக்கொள்ளாமல் அவன் இருந்த அசட்டை நிலையின் பின்னணியில் இருந்தது, துர்காவின் மீது அவன் கொண்ட நம்பிக்கை.
ஆயினும் ஓரு தருணத்தில் சந்தேகம் நம்பிக்கையை விழுங்க ஆரம்பித்த வேளையில், ஷிவாவிற்கும் சிதாராவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது என்ற விஷயத்தைக் கேள்விப்பட்ட அக்கணம், அடைக்கப்பட்டிருந்த மூச்சு நிம்மதியாய் வெளிவந்தது போல் இருந்ததை அவன் மட்டுமே அறிவான்!
ஆயினும் அவளைத் தேடிச் சென்றானா? இல்லையே!
அப்படி இருக்க இன்றும் மட்டும் என்னவாகிற்று??
புத்தியும் மனமும் மாற்றி மாற்றிக் கேள்விகளால் அவனைத் துளைத்துக் கொண்டிருந்தன.
‘எவ்வளவு ஆங்காரத்துடன் போன வருண், ஆனால் என்ன ஆச்சு? துர்கா அங்க இருப்பான்னு தெரியும் தானே, பின் ஏன் அவளைப் பார்த்ததும் இப்படி அமைதியாகிட்ட?’
இப்பொழுது அவனது மனசாட்சி அவனை வினவியது.
ஒரு கரத்தால் வாகனத்தைச் செலுத்தியவாறே, முன்னுச்சி முடியை அழுந்த கோதியவனின் மறு கரம் கழுத்தைத் தடவி கொண்டே இருக்க, அவனது உட்கன்னம் கடிபடுவதைப் பார்த்தவாறே அருகில் அமர்ந்திருந்த ஜாஃபருக்கும் அதே கேள்வியே திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.
'எவ்வளவு பெரிய குற்றச்சாட்டை அந்த ஷிவ நந்தன் இவர் மீது சுமத்தப் போகின்றான். அது உண்மை இல்லை என்றாலும் ஒரு வேளை இவர் மீது இருக்கும் ஆத்திரத்தில் பொய்யான ஆதாரங்களை உருவாக்கி, இவர் தான் குற்றவாளி என்று நிரூபித்தான் என்றால், தேஸாய் க்ரூப்ஸின் நிலைமை என்ன? ஆனால் துர்காவைப் பார்த்ததுமே சட்டென அடங்கியவராக அந்த ஷிவ நந்தனை ஒன்றும் செய்யாமல் வந்துவிட்டாரே? இது எங்குப் போய் முடியுமோ?'
ஜாஃபரின் மனம் ஆறவில்லை.
“சார்..”
“நீ என்ன சொல்ல வர்றன்ன எனக்கும் தெரியும் ஜாஃபர். ஆனால் அதுக்கான நேரம் இது இல்லை.”
பட்டென்று பதில் வரவும், ஜாஃபரும் மௌனமாகிவிட, கணங்கள் சில அமைதியாக வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த வருணின் அறிவு என்ன கூறியதோ ஒரு வழியாய் அவன் மனம் சமாதானப்பட்டது.
நிமிடங்கள் சில கடந்ததும், “ஜாஃபர்..” என்றழைத்தவன், தன் அடுத்தக்கட்ட நடவடிக்கையைப் பற்றி விவாதிக்கத் துவங்க, அதே வேளையில் அங்குத் துர்காவும் வருணின் மனநிலைக்குச் சற்றும் மாற்றமில்லாத ஒரு உணர்ச்சிகரமான நிலையில் சிக்கியிருந்தாள்.
சிதாராவின் இல்லத்தில் வருணின் ஆக்ரோஷத்தில் அதிர்ச்சியில் உறைந்துப் போயிருந்தவளின் மனம் பல திக்குகளில் அலைமோதி திண்டாடிக் கொண்டிருந்தது.
மாமனின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கோபமாய்ப் பேசிக் கொண்டிருந்தவனின் தோற்றமும் செய்கையும் அவளுக்குள் பல எண்ணங்களை வித்திட்டிருந்தது.
இதில் தன்னைப் பார்த்த விநாடியே தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவனாய் விருட்டென்று வெளியேறியவனைப் பார்த்த மாமனும், சிதாராவும் ஒரு சேர தன்னை நோக்கித் திரும்பிப் பார்த்ததைக் கண்டதில் அவளுக்குள் அச்சமும் பிறந்தது.
‘கடவுளே! நீ தான்ப்பா என் கூடத் துணை இருக்கணும்.’
ஓய்வில்லாது மனம் வேண்டிக் கொண்டிருக்க, ஆயினும் அவர்கள் இருவருமே, குறிப்பாக ஷிவா எதுவுமே கேட்காததில் ஆசுவாசமும் படர, வெகு சிரமப்பட்டு விழா முடியும் வரை அமைதியாகக் காத்திருந்தவள் இரவு ஏறியதில் சிதாராவின் அறைக்கதவைத் தட்டினாள்.
அங்கு உடல் அசதிப் போகக் குளித்திருந்த சிதாரா இரவு உடைக்கு மாறிக் கொண்டிருந்தவள் அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறக்க, அங்குக் கைகளைப் பிசைந்தவாறே நின்று கொண்டிருந்த துர்காவைக் கண்டதும் ஏதோ புரிவது போல் இருந்தது.
"என்ன துர்கா?"
"சிதாரா, எனக்கு ஒரு உதவி செய்வியா?"
அவள் என்ன கேட்கப் போகின்றாள் என்பதை யூகமாகக் கணித்தவள் துர்காவின் கைகளைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றாள்.
"சொல்லு துர்கா, என்ன உதவி?"
"திரும்பவும் நாளைக்குத் தான மாமா இங்க வருவாங்க?"
"ஆமா.."
"நாங்களும் இங்க ஊரில் இருந்து ரெண்டு நாளுல கிளம்புறோம் இல்லையா?"
"ம்ம்ம்."
"அதுக்குள்ள நான் ஒரு முக்கியமான காரியத்தை முடிச்சிடணும் சிதாரா.”
“என்ன காரியம் துர்கா?”
“ஒரே ஒரு முறை நான் அவர்கிட்ட பேசிடணும்."
துர்காவின் பதிலில் திக்கென்று இருந்தது சிதாராவிற்கு.
மனம் பதற, "அவர்னா?" என்றாள்.
"சிதாரா, வர வர மாமாவுக்கும் அவருக்கும் பிரச்சனைகள் வலுத்துட்டே போகுது. முன்ன நடந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் அவங்க ரெண்டு பேருடைய தொழில்னு எனக்குத் தெரியும். ஆனால் இன்னைக்கு நடந்ததற்குக் காரணம் என்ன? ஒரு வேளை இப்போ நடக்குறது எல்லாம் என்னால தான் நடக்குதோன்னு எனக்குத் தோனுது சிதாரா."
"துர்கா, என் கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலை. அந்த அவர் யாரு?"
தெரிந்தே கேட்கும் தோழியிடம் என்ன கூறுவது என்ற யோசனையுடன் அவளது கண்களை ஒரு விநாடிப் பார்த்தவள் பின் தலை குனிந்தவளாய், "வருண்.. வருண் தேஸாய்.." என்றாள்.
ஏற்கனவே இதனைக் கணித்திருந்தாலும் இப்பொழுது மெய்யாய் வருணின் பெயரைக் கேட்டதும் அச்சத்தில் அடி வயிறு கலங்க ஆரம்பித்தது சிதாராவிற்கு.
"துர்கா, ப்ளீஸ். நான் சொல்றதைக் கேளு. நீ உன் மாமா போற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு என் ரூமுக்கு வரும் போதே எனக்குத் தெரியும், இது மாதிரி ஏதாவது யோசனையுடன் தான் வந்திருக்கன்னு. வேண்டாம் துர்கா. அவங்களுக்கு இடையில இருக்கிற பிரச்சனைகளை அவங்கத் தீர்த்துப்பாங்க. அதுவும் இல்லாமல் இது நீ நினைக்கிற மாதிரியான பிரச்சனை போல எனக்குத் தெரியலை. இது வேற, ஆனால் வெரி கான்ஃபிடன்ஷியல்-ன்னு என்னிடம் சொல்லிட்டு தான் போனார் உங்க மாமா. அதனால் நீ மனசுக்குள்ள எதையும் போட்டுக் குழப்பிக்காத.”
“இவ்வளவு கோபமா அவர் உங்க வீடு வரைக்கும் வந்து, மாமா சட்டையைப் பிடிச்சு இழுத்துக் கேள்விக் கேட்குறாருன்னா, நிச்சயமா வேற என்னவோ இருக்குன்னு தான் என் உள் மனசு சொல்லுது. அதுக்குக் காரணம் நானா இருக்கக் கூடாது சிதாரா.”
“வருணைப் பற்றி உனக்குச் சரியா தெரியாது துர்கா. அதனால் இதைக் கண்டுக்காமல் விடு. உன் மாமா எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க..”
அவள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் இறங்கி வராதவளாய்ப் பிடிவாதமாக நின்றவளை என்ன செய்வது என்று சிதாராவிற்கு தெரியவில்லை.
“தயவு செஞ்சு எனக்காக இதை மட்டும் செய் சிதாரா. “
இறைஞ்ச ஆரம்பிக்கும் தோழியைப் பார்த்தவாறே ஆழப்பெருமூச்சு எடுத்தவள் மனதிற்குள் ‘இதன் முடிவு என்னவோ’ என்று எண்ணியவளாய் வேறு வழியின்றி வருணின் அலைபேசி எண்ணை தேடி எடுத்துத் துர்காவிடம் கொடுத்தாள்.
"துர்கா, எனக்கும் வருணுக்கும் நிச்சயம் பண்ணினப்போ இந்த நம்பரை அவங்க அப்பா எனக்குக் கொடுத்தார். எனக்குத் தெரிஞ்சு இது வருணுடைய ப்ரைவேட் நம்பராகத் தான் இருக்கணும், ஆனால் நான் இதுவரை அவர்கிட்ட பேசினது கிடையாது. அதனால் எனக்கு இன்னும் அவர் இந்த நம்பரை யூஸ் பண்றாரான்னு தெரியாது.."
"நான் பார்த்துக்குறேன், ஆனால்.." என்று முடிக்காது விட்டவளை கூர்ந்துப் பார்த்த சிதாரா, "உன் மாமாவிடம் இதை நான் சொல்ல மாட்டேன். ஆனால் அதுக்காக நான் வருத்தப்படுற அளவுக்கு என்னைக் கொண்டு போய் விட்டுடாத துர்கா." என்று முடித்தாள்.
சரி என்று ஆமோதிப்பாய் தலையசைத்தவள் தனக்கென்று கொடுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றவளாய் கதவை மூடிவிட்டு அழைத்தாள், சிதாரா கொடுத்திருந்த எண்ணிற்கு.
அங்குத் தன் வீட்டின் மேல் தளத்தில், எதிரே தெரிந்த கரும் இருளைப் போர்த்தியிருந்த ஆகாயத்தையே வெறித்துப் பார்த்தவனாய் மறு கையில் பிடித்திருந்த மதுவை அருந்திக் கொண்டிருந்த வருணின் சிந்தனையைக் கலைத்தது அலைபேசியின் ஓசை.
நின்றவாக்கிலேயே திரும்பிப் பார்த்தவன் அங்கு இருக்கையில் வைத்திருந்த அலைபேசியில் புது எண் ஒளிரவும் யோசனையில் அவனது புருவங்கள் இடுங்கின.
'யார் இந்த நேரத்தில?'
மனம் எண்ணினாலும் அலைபேசியை எடுக்காது நின்றிருந்தவன் அதன் ஓசை அடங்கி மறுபடியும் எழவும், மெள்ள குனிந்து அதனை எடுத்தவனாய் காதில் வைக்க, "ஹ.. ஹலோ.." என்று மறுமுனையில் திக்கித்திணறிக் கேட்ட குரலில் இது என்னவிதமான உணர்வு என்று சொல்ல முடியாதளவிற்கான உணர்ச்சி அலைகளில் சிக்கிப் போனான்.
ஆனால் அந்த ‘ஹலோ’-விற்கு அவன் பதில் சொல்லவில்லை.
விநாடிகள் சில கடந்த நிலையில் மீண்டும் "ஹலோ.." என்றாள். ஆயினும் அப்பொழுதும் அவன் பதிலுரைக்கவில்லை.
இது நிச்சயம் வருணே தான், இல்லையெனில் தன் ஹலோவிற்குப் பதில் கூறியிருப்பார்கள்.
ஆக அவன் எதிர்முனையில் இருக்கின்றான், ஆனால் பேச விரும்பாது அமைதிக் காக்கின்றான் என்று புரிந்ததில் எதுவோ உள்ளே நொறுங்கிப் போனது போல் உணர்ந்ததில் அலைபேசியைப் பிடித்திருந்த அவளது கரமும் மெல்லமாய் நடுங்கியது.
சில கணங்கள் அமைதிக் காத்தவள் இருந்தாலும் தெளிவுப்படுத்திவிடும் நோக்கத்துடன் தன் நிலையை இழுத்துப் பிடித்தவாறே, "நான் துர்கா பேசுறேன். நீ.. நீங்க வ.. வருண் தேஸாய் தான?" என்றாள் தட்டுத்தடுமாறும் சாரீரத்தில்.
அப்பொழுதும் அவனிடம் இருந்து பதில் வரவில்லை.
அவன் தன்னைப் பார்த்தமாத்திரத்தில் அவனையே கட்டுப்படுத்திக் கொண்டவனாய் தன் மாமனை எதுவும் செய்யாது வெளியேறி இருந்ததில், அவன் மனதில் தன்னைப் பற்றிய எண்ணங்கள் இருக்குமோ என்று எதிர்பார்ப்புடன் அழைத்திருந்தவளுக்குப் பேரிடியாய் ஏமாற்றமே தலையில் இறங்கியது.
"நீங்க வருண் தான்னு எனக்குத் தெரியுது. ஆனால் என்கிட்ட பேசாம இருக்கீங்க. ஒரு வேளை உங்களுக்கு என்கிட்ட பேச விருப்பமில்லைன்னா சொல்லுங்க, இனி நான் பேசலை. உங்களை நான் தொந்தரவு செய்யறதா நினைச்சீங்கன்னா என்ன மன்னிச்சிடுங்க, நான் வச்சிடுறேன்.."
அவளின் கோபத்தில் சுருங்கிக் கிடந்த அவனது புருவங்கள் சற்று மலர்ச்சியில் விரிந்தன.
அவளது பேச்சைக் கேட்டதும் அவனறியாது அவனுள்ளே ஒரு சிலிர்ப்பும் ஓடி மறைந்தது!
ஆயினும் அவளது கோபத்தையும் ரசிக்க விரும்பியவன் போல், "நான் வருண் தேஸாய் தான், ஆனால் பேசுறது எந்தத் துர்கான்னு தான் யோசிக்கிறேன்?" என்றான்.
கிண்டலாய் பேசியவனின் வார்த்தைகளில், அக்கணம் வரை ஏதோ ஒரு நம்பிக்கையில் அவளது இதயத்தைச் சுருட்டிக் கிடந்த அவன் மீதான நேசம் தாறுமாறாய் அறுந்துப் போனதைப் போல் இருந்ததில் உள்ளுக்குள் துடிதுடித்துப் போனாள் பெண்ணவள்.
“எ.. எ.. என்ன சொல்றீங்க?”
“எந்தத் துர்கான்னு தெரியலைன்னு சொல்றேன்.”
"உங்களுக்கு எத்தனை துர்காவைத் தெரியும்னு எனக்குத் தெரியலை, ஆனால் நீங்க கடத்திட்டுப் போனீங்களே, அந்தத் துர்கா.."
"நான் கடத்திட்டு போற பொண்ணுங்க பேரெல்லாம் நியாபகம் வச்சிக்கிறதில்லை, அதுவும் நான் கடத்தின பொண்ணுங்கள்ல எத்தனை துர்கா இருந்தாங்களோ?"
ஏற்கனவே அவனது புறக்கணிப்பில் வாடிச் சருகாய்க் காய்ந்திருந்த நெஞ்சதிற்குள் தீக்கங்குகளைச் சரளமாய் அள்ளி வீசினான்.
"மன்னிச்சுக்கோங்க, உங்களுக்கு அவ்வளவு பொண்ணுங்களைத் தெரியும்னு எனக்குத் தெரியாமல் போயிடுச்சு. இனி உங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன். வச்சிடுறேன்.."
"நீ தொந்தரவு செய்யறன்னு நான் சொன்னேனா?"
"ஆனா எந்தத் துர்கான்னே உங்களுக்குத் தெரியலையே. நீங்க சந்திச்ச பொண்ணுங்க ஏகப்பட்ட பேரு இருக்காங்க போல. அவங்கக்கிட்ட எல்லாம் பேசுறதுக்கே உங்களுக்கு நேரம் பத்தாது, பிறகு யாருன்னே தெரியாத இந்தத் துர்காக்கிட்ட பேசுறதுக்கு உங்களுக்கு எப்படி நேரம் இருக்கும், அதான் தொந்தரவு செய்ய வே.."
அவளை முடிக்கவிடல்லை அவன்,
"சரி, நீ என்னைத் தொந்தரவு செய்யறது இருக்கட்டும். எப்படி என் நம்பர் உனக்குக் கிடைச்சது? அதைச் சொல்லு.." என்றதுமே மிச்சமீதி இருந்த கொஞ்சநஞ்ச நப்பாசையும் கண் மூடித்திறப்பதற்குள் பறிபோனது.
"சிதாராத் தான் கொடுத்தாள். சிதாராவையாவது யாருன்னு தெரியுமா?"
சிறு பெண் போல் கிளிப்பிள்ளையா மிளற்றும் அவளின் பேச்சில் ஏற்கனவே மலர்ந்திருந்த அவனது மனம் மேலும் விரிந்தது.
அந்த உணர்வை அனுபவிக்க நினைத்தானோ என்னவோ அவனிடம் பேச்சு எழவில்லை.
மீண்டும் அமைதி நிலைத்ததில் இதற்கு மேல் பேசி பயனில்லை என்ற முடிவிற்கு வந்தவளாய், "சரி, அவங்களையும் மறந்திட்டீங்கன்னு நினைக்கிறேன்.. அப்போ நான் நிஜமாவே வச்சிடுறேன்.." என்றாள் கசிந்துருகும் குரலில்
"ஏய், என்ன எதுக்கெடுத்தாலும் வச்சிடுறேன் வச்சிடுறேன்னு சொல்லிட்டே இருக்க?"
அதுவரை சிறிது அமைதியாகப் பேசிக் கொண்டிருந்தவனின் குரலில் திடுமென அநியாயத்திற்கு அதிகாரம் பறக்க, தன்மானத்தில் அவளுக்கும் கோபம் வந்தது.
"ஏன் இப்படிக் கோபப்படுறீங்க? என்னையும் யாருன்னு உங்களுக்குத் தெரியலை, சிதாராவையும் யாருன்னு தெரியலை. கேட்டால் பதிலும் இல்லை. நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்கன்னும் எனக்குத் தெரியலை. நான் உங்களைக் கூப்பிட்டது உங்களுக்குப் பிடிக்கலையோன்னு தோனுச்சு, அதான் வச்சிடுறேன்னு சொன்னேன்.."
"நான் பதிலே பேசாமல் நான் என்ன நினைக்கிறேன்னு உனக்கு எப்படித் தெரியும்?"
"அப்ப என்ன நினைச்சீங்க?"
"என்னென்னவோ நினைக்கலாம்"
"என்னன்னு?"
"அதான் என்னென்னவோன்னு சொன்னேனே.."
கூறியவனின் உதடுகள் அதிசயத்திலும் அதிசயமாய்ப் புன்னகையில் சற்று விரிந்ததை அவள் எப்படி அறிவாள்?
பதிலளிக்காது அமைதியாக அவள் இருக்க, "என்ன சத்தத்தையே காணோம்?" என்றான்.
"முதல்ல நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுதான்னு சொல்லுங்க.."
"நீ எந்தத் துர்கான்னும் தெரியும், சிதாரா யாருன்னும் தெரியும்.. ஸோ, சொல்லு, எதுக்குக் கூப்பிட்ட?"
"அது.."
"அது தான் சொல்லு.."
"ம்ப்ச்.."
"கூப்பிட்டுட்டு இப்படிச் சலிச்சிக்கிட்டா என்ன செய்யறது?"
"ஏன் எப்பப் பார்த்தாலும் எங்க மாமாகிட்ட சண்டைப் போட்டுக்கிட்டே இருக்கீங்க?"
"அதுக்குத் தான் கூப்பிட்டியா?"
"ஆமா.."
"அப்போ வேற எதுக்கும் இல்லை, ரைட்? "
“ம்ம்ம்..”
“Really?”
“ஆமா, அதுக்குத் தான் கூப்பிட்டேன். மாமாவோட சட்டைக் காலரைப் பிடிச்சு இழுக்கிற அளவுக்கு அவங்க மேல என்ன கோபம்? அதுவும் அவங்க வீட்டுல விசேஷம் நடக்கும் போது?"
"ஏன், அவன் மட்டும் என் வீட்டுல விசேஷம் நடக்குற அன்னைக்கு வந்து என்னை அரெஸ்ட் பண்ணலையா?"
"அதெல்லாம் முடிஞ்சுப் போன விஷயம். அதுக்கும் நீங்க பழி வாங்கிட்டீங்க இல்லையா? பிறகு என்ன?"
"என்ன பழிவாங்கிட்டேன்?"
இதற்கு என்ன பதில் கூறுவாள் அவள்??
அவளின் மனதில் ஓடும் சங்கடங்களையும் வருத்தங்களையும் புரிந்துக் கொண்டாலும், அவளது மாமனைப் பற்றி விசாரிக்க மட்டுமே அழைத்திருக்கின்றாள் என்பதைக் கேட்டதில், அவனது கடின இதயத்திற்குள்ளும் பொறாமைத் தீ அக்கணம் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததை அவள் எங்கனம் அறிவாள்?
அதன் வெளிப்பாடு அவனது வார்த்தைகளில் தெறித்தது.
"நீ பதில் சொல்லாட்டிலும் பரவாயில்லை, ஆனால் சும்மா பழிவாங்கிட்டேன்னு சொல்லாத. நான் கடத்திட்டு போற பொண்ணுங்களுக்கு எல்லாம் நான் கொடுக்கும் தண்டனையைப் பற்றி உனக்குத் தெரியாது. ஆனால் அதில் நீ விதிவிலக்கு. நான் கடத்தின பொண்ணுங்களுக்குச் செய்ததை உனக்குச் செய்ய விருப்பம் இல்லாததால் தான், உன்னை ஒண்ணும் செய்யாமல் விட்டுட்டேன்.
அதுவும் இல்லாமல் அந்தப் பொண்ணுங்களை எல்லாம் ரெண்டு நாள் தான் நான் வச்சிருப்பேன், அதுக்குள்ள அவங்க வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கான தண்டனையை அவங்களுக்குக் கொடுத்திருப்பேன். அது போல உன் மாமன் மேல உள்ள கோபத்தை எல்லாம் உன் மேல் காட்டிட்டு, பிறகு உன்னைக் கொண்டு போய் அவன் கிட்டயே விட்டுடணுங்கிறது தான் என் ப்ளான், ஆனால் என்னவோ உன்னிடம் அப்படிச் செய்ய முடியலை.
அதுக்குப் பதிலா தான் அவன் பைத்தியம் மாதிரி உன்னைத் தேடி அலையட்டும்னு நான் உன்னை ரெண்டு மாசம் என்கிட்ட வச்சிருந்தேன். நான் நினைச்சிருந்தால் உன்னை என்ன வேணாலும் செய்திருக்கலாம். ஆனால் உன்னை எதுவும் செய்யாமல் நீ என்கிட்ட வந்து சேர்ந்த மாதிரியே உன்னைத் திரும்பவும் அனுப்பி வைச்சேன். ஐ மீன் உன் கல்யாணப் புடவையிலேயே. இப்பத் தெரியுதா நான் மத்தப் பொண்ணுங்களைப் பழிவாங்குறதுக்கும் உனக்கும் உள்ள வித்தியாசம்?" என்றவன் துளியும் அறியவில்லை.
முதலாவது, தான் வாழ்நாளில் முதன் முறை இவ்வளவு நேரம், அதுவும் ஒரு பெண்ணிடம் பேசி இருக்கின்றோம் என்பதையும், பொறாமையில் தான் கூறும் இவ்வார்த்தைகள் தனக்கும் அவளுக்கும் இடையே பெரும் பிளவைக் கொண்டு வரும் என்பதையும் தேசத்தையே தன் பராக்கிரம் கொண்டு நடுங்க வைக்கும் அந்த இளம் தொழிலதிபன் அன்று அறியவில்லை
போதுமே, இது போதுமே, இதற்கு மேல் என்ன இருக்கு இவனிடம் பேசுவதற்கு என்று சம்மட்டியால் அடித்தது போன்று துர்காவின் மூளை அவளுக்கு உணர்த்தியது.
"நான் வச்சிடுறேன்.."
அவனும் தாமதிக்கவில்லை, பட்டென்று, "சரி வச்சிடு..:" என்றான்.
அவனது பதிலில் கன்னிகையின் உள்ளம் உடைந்துப் போனதோ இல்லையோ, ஆனால் இறுகிப் போனது.
அலைபேசியை உடனேயே அனைத்தவளின் முகம் வெளுத்துப் போக, ஆழ இழுத்து மூச்சினைவிட்டவளாய் அறையைவிட்டு வெளியே வந்தவள் படிகளில் மெதுவாக இறங்க, அவளின் வருகையை எதிர்பார்த்திருப்பது போல் அவள் அறை வாயிலின் மீதே பார்வையைப் பதித்திருந்த சிதாராவுக்குத் தன் சந்தேகம் உறுதியானது.
'ஆக இவளுக்கும் வருணுக்கும் இடையில் ஏதோ இருக்கு?'
"என்ன துர்கா? என்ன ஆச்சு?"
"நீ இன்னும் தூங்கலையா சிதாரா?"
"துர்கா, நான் கேட்ட கேள்விக்கு நீ முதல்ல பதில் சொல்லு.."
"ஹேய், நீ கர்ப்பமா இருக்கப்பா.. இதுல இன்னைக்கு வளைகாப்பு வேற. எவ்வளவு அசதியா நீ இருக்கன்னு உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது. போ, நீ போய்த் தூங்கு.."
"நான் தூங்குறது இருக்கட்டும் துர்கா.. வருணிடம் பேசினியா?"
நடு வீட்டில், அதுவும் மாடிப்படிகளின் மத்தியில் நின்று கொண்டு வருணின் பெயரை உச்சரிக்கும் தோழியின் செய்கையில் திடுக்கிட்டவளாய் சுற்றும் முற்றும் பார்த்தாள் துர்கா.
"ம்ப்ச், இங்க யாரும் இல்ல. பயப்படாத.."
"சிதாரா.."
"என்ன? உங்க ஊருல ஒரு பழமொழி இருக்குல்ல? பகல்ல பக்கம் பார்த்து பேசு, ராத்திரியில் அதுவும் பேசாதன்னு."
"நீ நல்லாவே தேறிட்ட.."
கூறியவளாய் சிதாராவின் கன்னம் பற்றிய துர்கா,
"சுவத்துக்குக் கூடக் காது கேட்கும்னு கூடச் சொல்வாங்க எங்க ஊருல, அதனால் எல்லாத்தையும் நாம அப்புறமா பேசிக்கலாம். இப்ப வேண்டாம். நீ போய்த் தூங்கு.." என்றவளாய் விறுவிறுவென்று மீண்டும் படியேறி தன் அறைக்குள் நுழைந்துக் கதவை சாத்திக் கொண்டாள்.
'கடவுளே! சிதாராக்கிட்ட இருந்து தப்பிச்சிக்கிட்டோம், ஆனால் ஒரு வேளை இவ ஷிவா மாமாக்கிட்ட நான் வருணுடைய ஃபோன் நம்பரைக் கேட்டதைச் சொல்லிட்டா..'
மனம் அதன் போக்கில் எண்ணங்களை வரிசைக்கட்டி நிற்கச் செய்ய, அதன் முடிவில் தான் கடத்தின பெண்களுக்கான தண்டனையைப் பற்றி வருண் பேசியது உயரமாய்த் தலை தூக்க, மனம் கிடுகிடுவென்று நடுங்கத் துவங்கியது.
'ஐயோ! இவர் அப்படிப்பட்டவரா? ஆனால் அந்தக் காட்டுக்குள்ள என்னை அவர் அடைச்சு வச்சிருந்தப்போ தப்பா நடந்துக்கவே இல்லையே. ஒரு வேளை அதுக்குக் காரணமும் இப்போ அவர் சொன்னது போல, மாமாவை பைத்தியம் மாதிரி அலையவிடறது மட்டுமே அவர் நோக்கமோ? அப்படின்னா அதான் அவர் இந்நாள் வரை எந்த விதத்திலும் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூட இல்லையா? கடவுளே! போதும், இது வரை நான் ஏமாந்தது. இனி அவரை நான் பார்க்கவே கூடாதுப்பா. அதுக்கு நீ தான் வழி செய்யணும்.'
இதயத்தின் ஒரு கூறு பிராத்திக்க, மறு கூறோ அவனைப் பார்க்காமல் இருக்க உன்னால் இயலுமோ என்று போட்டியிட, ஆனால் இரு கூறுகளும் ஒன்றாய் சேர்ந்த முழு இருதயமோ 'அவனைப் பார்க்காது இனி வாழ்ந்திட முடியுமா' என்ற கசப்பான உண்மையில் துடித்தது.
ஆனால், இதயத்தினுள் நடந்த போட்டிக்கு பதிலாய் இயற்கை ஒன்றை நிகழ்த்திக் காட்டியது!!
அது எந்த வருணைத் தான் இனி சந்திக்கக் கூடாது என்று அவள் விரும்பாமலேயே பிராத்தித்தாளோ அதே வருணை அவள் மறுநாளே சந்தித்தாள்.
சந்தித்தது மட்டுமா?
அதற்குப் பிறகு பிடித்தோ பிடிக்காமலேயோ, அவளின் ஒவ்வொரு நாளும் அவன் அருகில், அவனது படுக்கை அறையில், அவன் முகம் பார்த்தே அவளை விழிக்க செய்த அவளின் விதிப்பயனை என்ன சொல்வது?
அரிமாக்களின் வேட்டை!
தொடரும்.