JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 26

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 26

மணவாழ்க்கையின் அடிப்படையான கற்பின் சின்னமாகக் கருதப்படும் அம்மிக்கல்லின் மீது பாதங்களை வைத்து மங்கலச் சின்னமான மெட்டியை சிதாராவின் கால் விரலில் அணிவிக்கும் நேரம் ஷிவ நந்தன் நிமிர்ந்து அவளை நோக்க, நாணத்துடன், அவன் விரல் பற்றியிருந்ததில் கூச்சமும் கலந்ததில் சிவந்த நிறத்தவளின் முகம் மென்மேலும் செவ்வரளியின் நிறத்துக்கு மாறியது.

அவனைப் பார்க்க இயலாது பார்வையைத் தாழ்த்திக்கொள்ள, புன்னகையுடன் மெட்டியை மாட்டி முடித்தான்.

"பெரியவங்க காலில் விழுந்து ஆசிர் வாங்குங்க.."

உறவினர் ஒருவர் கூற, மனைவியுடன் இணைந்து தன் பெற்றோரின் காலில் விழுந்து ஆசிப்பெற்ற ஷிவா அடுத்து நின்றிருந்த மாமனார் முகேஷ் சௌஹானின் காலில் விழுவதற்கு மறுக்க, திக்கென்று இருந்தது சிதாராவிற்கு.

அவனது முகத்தைத் தயக்கத்துடன் ஏறிட்டு நோக்க, அமைச்சர் முகேஷைப் பற்றியும் அவரது மோசடிகள், தில்லுமுல்லுகள் என்று அனைத்தையும் அறிந்திருந்ததில், அவரிடம் ஆசிர் பெற அவன் இஷ்டப்படவில்லை என்பது தெளிவாய்த் தெரிந்தது.

"ஷிவா.."

மெல்லிய குரலில் யாசித்தவளைக் கண்டவன், "நீ வாங்கிக்கச் சிதாரா.." என்றுவிட்டுப் பெற்றோரிடம் பேசும் சாக்கில் திரும்பிவிட, அவனது உதாசீனம் பெருத்த அவமானத்தை வரவழைத்தது, சிதாராவின் தந்தைக்கு.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த துர்கா மணமேடையில் ஏறியவள் ஷிவாவின் அருகில் வந்தவளாய்,

"மாமா, என்ன தான் இருந்தாலும் அவரு உங்க மாமனார், சிதாராவோட அப்பா. அவருக்கு நீங்க.." என்றவளை அவன் திரும்பிப் பார்த்த வேகத்தில் இப்பொழுது அவளுக்கு அடிவயிறு கலங்கியது.

"நீ எனக்கு அட்வைஸ் பண்றியா?"

இல்லை என்பது போல் மறுப்பாய் தலையசைத்தவளின் பரிதாபத் தோற்றம் என்ன செய்தததோ சட்டென்று இறங்கி வந்தவனாகச் சிதாராவின் கைப்பற்றியவன், அவளது பெற்றோரின் கால்களை நோக்கி குனிந்தான்.

அதனில் சிறிதே நிம்மதி பெருக, சிதாராவின் பெற்றோர் மணமக்களை ஆசிர்வாதம் செய்யத் தயாராக இருக்க, மாமியாரின் கால்களை மட்டும் தொட்ட ஷிவா, முகேஷின் பாதங்களைத் தொடாது எழுந்துவிட்டதில் சிதாராவின் மனம் தான் புண்பட்டது.

ஆயினும் அவன் ஏற்கனவே கூறியது போல் அவளது அப்பா ஒன்றும் மகாத்மா காந்தியல்லவே!

ஒருவழியாக மற்ற சடங்குகளும் நிறைவேற, ஷிவாவின் வலது மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்த, மஞ்சள் கயிறால் செய்யப்பட்டிருந்த காப்பு கழற்றப்பட, அவனுக்குப் பழைய நியாபகங்கள் மனக்கண்களின் முன் அலைமோதத் துவங்கியது.

தனக்கும் துர்காவுக்கும் திருமணம் நடைபெறவிருந்த நாளன்று நடந்த அசம்பாவிதத்திற்குப் பிறகு கையில் அணிந்திருந்த காப்பினை தான் திருமண மண்டபத்தில் அறுத்தெறிந்தது நியாபத்தில் படர, நெடுமூச்சு விட்டவனுக்குள் மீண்டும் மீண்டும் வருணின் மீதான ஆங்காரம் படையெடுக்க ஆரம்பித்தது.

சடுதியில் முகத்தில் கடுமைப் படரத் துவங்க விரைத்த தேகத்துடன் நின்றிருந்தவனின் இறுகிப் போன தோற்றத்தை தன் அலுவலக அறையில், கால் மேல் கால் போட்டு அமர்ந்தவனாய் ஒரு கையால் சிகாரைப் பிடித்தவாறே பார்த்திருந்த ஆர்யனின் முகம் உணர்ச்சிகளைத் துடைத்து எடுத்தது போல் மாறியது.

'சஹானா பாக்ஷியின் கொலை. அதற்குப் பின்னணியில் இருப்பது மத்திய அமைச்சர் ஆர்ய விக்னேஷா?'

கடந்த சில வாரங்களாகவே செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருந்த விஷயம் இது.

‘SSP ஷிவ நந்தனின் அதிரடியான விசாரணையில் வெளியான தகவல்களின் படி, பிரபல மாடலும் திரைப்பட நடிகையுமான சஹானா பாக்ஷியின் படுகொலைக்குக் காரணமாக இருப்பது மத்திய அமைச்சர் ஆர்ய விக்னேஷ் என்ற குற்றச்சாட்டு பரவலாகப் பேசப்படுகின்றது. அதற்கான தகுந்த சாட்சியங்கள் சிக்கியிருப்பதாகக் காவல்துறை வட்டாரத்தில் செய்திகள் உலா வருகின்றன. அமைச்சர் ஆர்ய விக்னேஷிற்கும் சஹானா பாக்ஷிக்கும் இடையில் இருந்த தொடர்பு அனைவரும் அறிந்ததே. ஆயினும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர் என்றும், அதனால் ஆர்ய விக்னேஷின் தனிப்பட்ட விவகாரங்களைத் தெரிந்து வைத்து இருந்த சஹானா பாக்ஷி அவரின் மேல் கோபம் கொண்டு, அதனை வெளியிடப் போவதாக அவரை ப்ளாக் மெயில் செய்தததாகவும் விஷயங்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றன. இதனாலேயே அவரை ஆர்ய விக்னேஷ் கொலை செய்திருக்கக் கூடும் என்ற தகவலும் நம்பகமான இடங்களில் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் இதனில் ஆர்ய விக்னேஷ் நேரடியாக ஈடுபட்டிருக்கின்றாரா அல்லது மறைமுகமாகவா என்பதனை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.’

இதனையே வைரலாக ஊடகங்களும் ஒலிபரப்பிக் கொண்டிருக்க, உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பிற்கு ஈடாக அவன் பிடித்திருந்த சிகாரின் நெருப்பும் கனன்று கொண்டிருக்க, மெதுவாகப் புகையை இழுத்து வெளியே விட்டவனாய் அலைபேசியைக் கையில் எடுத்தவன் வருணை அழைத்தான்.

அவனது பெயரைத் தன் அலைபேசியில் பார்த்த வருண் கண்கள் சுருங்க விநாடிகள் சில யோசித்தவன், "ஹலோ.." எனவும், "என்ன வருண், சிதாராவுடைய கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு போல இருக்கு.." என்றான் கிண்டல் வழிய.

"ம்ம்ம்.." என்று மட்டும் கூறிய வருணைக் கண்டு சிரித்த ஆர்யன்,

"ஆனால் நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை வருண். உன்னுடைய எக்ஸ் ஃபியான்ஸியை [ex fiancé] அந்த ஷிவ நந்தன் கல்யாணம் பண்ணிப்பான்னு.." என்றான்.

"யாரு யாரைக் கல்யாணம் செய்துக்கிட்டா நமக்கு என்ன ஆர்யன்?"

“அது சரி. அதான் நீயே அந்தச் சிதாராவை வேண்டாம்னு சொல்லிட்டியே. எனிவேய்ஸ், அந்தத் துர்கா இப்போ யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறா வருண். அது பெரிய புதிரா இருக்கு, ரைட்?"

ஆர்யனின் பேச்சும், பேசிய தோரணையும், மறுமுனையில் கேட்ட சிரிப்பு சத்தமும் வருணுக்கு பெரும் எரிச்சலையும் அயர்வையும் கொணர்ந்தது.

"ஆர்யன், நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லிருக்கேன், எனக்கு என்னுடைய பெர்ஸனல் விஷயத்தில் தலையிடறது யாராக இருந்தாலும் பிடிக்காது என்று. "

வருணின் பதிலில் மனதிற்குள் அப்படின்னா துர்கா அவன் சொந்த விஷயமுன்னு சொல்ல வருகின்றானா என்று நூறாவது முறையாக யோசித்தவனுக்கு வருண் மீது இருந்த ஐயுறவு மென்மேலும் வலுக்க, மீண்டும் சிகாரின் புகையை இழுத்தவனாக,

"ஒகே வருண். But those who tread among serpents, and along a tortuous path, must use the cunning of the serpent." என்றதில் வருணின் புருவங்கள் உயர்ந்தன.

"என்ன சொல்ல வர்றீங்க ஆர்யன்?"

"நீ எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கிறது நல்லதுன்னு சொல்ல வர்றேன் வருண்."

அவன் என்ன கூற வருகின்றான் என்பது வருணுக்கு நன்றாகவே புரிந்தது.

துர்கா மீது தனக்கு எதுவும் அபிப்பிராயமோ பிரியமோ இருந்தால் அது நாகங்கள் இருக்கும் பகுதியில் நடப்பது போன்று.

ஆகையால் எச்சரிக்கையாகவும் தந்திரமாகவும் நடந்து கொள்வது புத்திசாலித்தனம் என்று கூறுகின்றான்.

ஏனெனில் துர்காவிற்கு ஏதாவது ஒன்று என்றால் ஷிவா நிச்சயமாகத் தன்னைச் சும்மாவிட மாட்டான் என்று மறைமுகமாக எச்சரிக்கின்றான் என்பதைப் புரிந்துக் கொண்டவனாக, உதடுகளின் இடது கோடியில் நெளியும் இகழ்ச்சி புன்னகையுடன் வருண் அடுத்து கேட்ட கேள்வியில் ஆர்யனின் மனம் அங்குத் தடம் புரண்டது.

"துர்கா இருக்கட்டும் ஆர்யன். சஹானா பாக்ஷி. கொஞ்ச நாளா அவளுடைய கொலையைப் பற்றிய விஷயம் வைரலா இருக்குதே. அதற்குப் பின்னால் நீங்க இருப்பதாக வேற ஷிவா சொல்லிட்டு இருப்பதாகவும் மீடியாஸில் சொல்றாங்களே."

"பெர்ஸ்னல் விஷயம் பேசக் கூடாதுன்னு சொன்னியே வருண்."

ஆர்யனின் கூற்றில் அதிசயமாய் வாய்விட்டுச் சிரித்தான் வருண்.

அவனது வியக்கத்தக்க சிரிப்பு ஆர்யனின் இதயத்தில் அச்சத்தைச் சுருக்கென்று தைக்கச் செய்தது.

நண்பர்களைப் போல் வெளியில் இருப்பவர்களுக்குத் தோன்றினாலும் இவர்கள் இருவருக்கும் இடையில் ஒருவரும் அறியாத வகையில் சிறிய பிளவு ஒன்று ஏற்பட்டுக் கொண்டிருந்ததை இருவருமே அறிந்து வைத்திருந்தார்கள் தான்.

ஆயினும் வருணால் ஆர்யனுக்குப் பெரும் ஆதாயம் உண்டு. அதே போல் ஆர்யனால் வருணுக்கும் ஆதாயங்கள் இல்லாமல் இல்லை.

ஆயினும் ஆர்யனை மட்டுமே எப்பொழுதும் சார்ந்து இருப்பதில் விருப்பமின்றியே அமைச்சர் முகேஷின் மகளான சிதாராவை மணமுடிக்க வருண் ஏற்பாடு செய்தது.

இப்பொழுது அதுவும் முறிந்துவிட்ட நிலையில் ஆர்யனைப் பகைக்கவும் அவனுக்கு விருப்பமில்லை.

ஆகையால் சட்டென இறங்கி வந்தவன்,

"ஆர்யன், The opportunity of defeating the enemy is provided by the enemy himself. ஷிவா எனக்கு எப்படி எதிரியோ அதே மாதிரி தான் உங்களுக்கும்னு எனக்குத் தெரியும். இன்னும் சொல்லப் போனால் அவன் நமக்கு வெறும் எதிரி மட்டும் இல்லை. அவன் நம்முடைய பரம எதிரியாகி ரொம்ப நாளாச்சு. ஸோ, இந்தக் கொலையில் உங்களுக்குச் சம்பந்தம் இருக்குதா இல்லையான்னு நான் தெரிஞ்சிக்க விரும்பலை. அது எனக்குத் தேவையும் இல்லை. ஆனால் இப்போ, இந்தக் கணம் ஷிவாவின் கண்கள் உங்கள் மேல் இருக்கு. உங்களைப் பிடிக்க அவன் திரும்பவும் வலை விரிக்க ஆரம்பிச்சிட்டான். எதிரியை தோற்கடிக்கும் வாய்ப்பு எதிரியாலேயே வழங்கப்படுகிறதுன்னு சொல்ற மாதிரி உங்க எதிரி உங்களை அழிக்க நீங்களே அவனுக்கு இடம் கொடுத்துடாதீங்க. அதான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கன்னு சொல்ல வந்தேன்.." என்றான் வெகு அமைதியாய்.

கொலைகள் செய்வது ஆர்யனுக்கு ஒன்றும் புதிதல்ல என்பது வருணுக்கு நன்றாகவே தெரியும்.

ஆர்யன் செய்த சில அரசியல் படு கொலைகளே அவனது இந்த உயரிய பதவிக்கும் மறைமுக ஏணிகளாக இருந்தது என்று அரசியலில் உலா வரும் அப்பட்டமான உண்மைகள்.

அதே போல் 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' என்று பெயர் பெற்றிருந்த ஷிவ நந்தனுக்கும், க்ரிமினல்கள் என்று அவன் பட்டம் கொடுத்திருந்த மனித உயிர்களைப் பலி வாங்குவதில் வருத்தமோ தயக்கமோ இருந்ததில்லை.

ஆகையால் சசிதரனின் மரணத்தில் இருந்தே ஆர்யனின் மீது ஒரு கண்ணும், தன்னைப் பண மோசடிக்காகக் கைது செய்த நாளில் இருந்தே ஷிவாவின் மீது மற்றொரு கண்ணையும் வைத்திருந்தான் வருண் என்றே சொல்லலாம்.

"எஸ் வருண். அதான், Never wound a snake, kill it. என்ற முடிவுக்கு வந்துட்டேன்.."

அவனது கூற்று தன் அலுவலகத்தில் சாய்வாக நாற்காலியில் அமர்ந்திருந்த வருணை சற்று நிமிர்ந்து அமரச் செய்தது.

ஆக, ஷிவ நந்தனைக் கொல்வதற்கு இவன் நாள் குறித்துவிட்டான்!!

உண்மை புரிந்ததுமே ஆர்யனின் மீதான சந்தேகம் வருணுக்கு மேலும் வலுக்க ஆரம்பித்தது.

'அப்படி என்றால் மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவே சஹானாவின் மரணத்தில் இவனுக்கும் பங்கு இருந்திருக்கின்றது. ஒரு சினிமா நடிகையைக் கொல்லும் அளவிற்கு என்ன பகை அவளுக்கும் இவனுக்கும் இடையில் இருக்க முடியும்? ஆனால் அதற்காகக் காவல்துறையில் பெரும் பதவியில் இருக்கும் ஒரு உயர் அதிகாரியை கொலை செய்யவும் துணிந்திருக்கின்றான் என்றால்? ஆக, இதற்குப் பிறகு வேறு காரணங்களும் இருக்க வாய்ப்பிருக்கின்றது.'

யோசித்தவனாக அதற்கு மேல் எதுவும் பேசாது அலைபேசியை அணைத்த வருண் தொழில் விவகாரங்கள் தவிர்த்து ஆர்யனை சந்திப்பதை தவிர்க்க ஆரம்பித்தான்.

*************************************************************

காமங் காமம் என்ப காமம்

அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்

கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை

குளகுமென் றாள்மதம் போலப்

பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.

குறுந்தொகை 136, மிளைப் பெருங்கந்தனார்

உரை: காமம் காமம் என்று உலகோர் அதை இழிவானதைப்போல் குறை கூறுவர். அக்காமமானது, பிறர் நம்மை வருத்துவதால் வருவது அன்று; அது ஒரு நோயும் அன்று. அது நுண்ணியதாகக் குறைதலும் பின்னர் மிகுவதும் இன்று. யானை தழை உணவை மென்று தின்று அதனால் மதம் கொண்டதைப் போல், இக்காமமும் கண்டு மகிழ்வதற்கு உரியவரைக் காணப்பெற்றால், அக்காட்சியால் அது தானாகவே வெளிப்படும் காலமும் உண்டு.

சிறப்புக் குறிப்பு: யானைக்கு எப்பொழுது மதம் பிடிக்கும் என்று கூற முடியாது. தழை உணவைத் தின்று கொண்டிருந்த யானைக்குத் திடீரென்று மதம் பிடித்ததைப்போல், காண வேண்டியவரைக் கண்டால் காம உணர்வு தானாகவே வரும் என்பது இப்பாடலில் உள்ள கருத்து.

*****************************************

என்னதான் காதலில் திளைத்து இவனேயே கணவனாக மனதில் தரித்துப் பெற்றோரிடம் யாசித்துத் திருமணம் வரை வந்துவிட்டாலும், இப்பொழுது அவனது உறவினர்களுடன் இணைந்து கணவனது வீட்டிற்குச் செல்வது சிதாராவிற்கு ஒருவித கலக்கத்தைக் கொண்டு வந்தது.

காரணம், இருவருமே இந்துக்கள் என்றாலும், அவளது குடும்பம் ராஜ புத்திரர்களின் வம்சாவளியின் பாரம்பரியங்கள் அனைத்துமே ஷிவாவின் இன பாரம்பரியங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டவை.

அவள் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் வடநாட்டில். ஷிவாவின் பிறப்போ தென்னிந்தியாவின் கிராமம் ஒன்றில்.

முகேஷ் சௌஹான் தமிழ்நாட்டில் வளர்ந்து வந்ததால் அவரால் எளிதில் தமிழர்களின் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்ற முடியும். அதனை மகளுக்கும் அவளின் சிறு வயது முதலே அவர் கற்றுக்கொடுத்து வந்திருந்தார்.

ஆனால் ஷிவ நந்தனின் குடும்பம்?

ஆக, அவனது பெற்றோரும் உறவினர்களும் தன்னை எந்தளவிற்கு ஏற்றுக்கொள்வர் என்ற ஒருவித அச்சம் ஏற்கனவே உள்ளுக்குள் இருந்து கொண்டே வந்ததில், இப்பொழுது தன் குடும்பத்தினரையும் விட்டு தனித்து அவனது இல்லம் செல்வதை நினைக்கும் போது பெண்ணவளுக்குப் படபடப்பாக இருந்தது.

கண்களில் நீர்திவளைகள் திரண்டு இருக்க, திமிறிக் கொண்டு வந்த அழுகையை ஒரு வழியாகப் பெரும்பாடு பட்டு அடக்கிக் கொண்டவளாக விடைபெற்று மணமக்களுக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரில் ஏற, அரசியல்வாதியாக இருந்தால் என்ன, இராஜ வம்சத்தவனாக இருந்தால் என்ன, தான் பெற்ற மகளைப் பிரிவது என்பது வேதனை தான் என்பது போல் நின்றிருந்த முகேஷின் முகமும் வாடத் துவங்கியது.

அவரது கைகளையும் அன்னையின் கரங்களையும் தன் இரு கரங்களாலும் பற்றி இருந்தவள் மேலும் இறுக்கி பிடித்தவளாய் விடைபெற்றவாறே காரில் ஷிவா அமர்வதற்கு இடம்விட்டு நகர, ஆனால் அவனோ மாமனாரைத் திரும்பியும் பார்க்காது காரைக் கிளப்பச் சொன்னது மென்மேலும் பேதையவளுக்கு அழுகையை வரவழைத்தது.

கார் சிறிது தூரம் சென்றதும் கணவனின் முகம் பார்த்தவள்,

"ஒரு வார்த்தைக்காகாவது அப்பாவைப் பார்த்து போயிட்டு வரேன்னு சொல்லிருக்கலாமில்ல.." என, அவளைத் திரும்பிப் பார்த்தவன் பதில் கூறாது ஜன்னலின் புறம் திரும்பினான்.

மணவிருந்து நடைபெரும் வரையிலும் கூடச் சற்று மலர்ச்சியோடு இருந்த அவனது முகம் அதற்குப் பிறகு உணர்ச்சிகளைத் துடைத்தெறிந்தது போல் மாறியிருந்ததை அவள் ஏற்கனவே கவனித்திருந்தாள்.

'என்ன ஆச்சு? ஏன் திடீர்னு இப்படி இறுக்கமா இருக்கிற மாதிரி இருக்கார்?'

பல முறை யோசித்தும் அவனிடம் அக்கணம் கேட்க தைரியம் வராது அமைதியாகி போயிருந்தவளுக்கு இப்பொழுது இருவரும் தனிமையில் இருப்பது நல்ல தருணம் என்று தோன்ற, மெல்ல அவன் கையைப் பற்றினாள்.

அவளின் தொடுகையில் அவளின் புறம் திரும்பியவனைக் கண்டு,

"எதுவும் பிரச்சனையா? காலையில் நல்லாத்தான் இருந்தீங்க, ஆனால் திடீர்னு கொஞ்சம் அப்செட் ஆன மாதிரி ஆகிட்டீங்க. என்ன ஆச்சு?" என்றாள் மெல்லிய குரலில்.

அவளுக்குப் பதிலளிக்காது மீண்டும் அவன் ஜன்னலின் புறம் நோக்க, அவ்வளவு தான் அதுவரை சிரமப்பட்டு அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.

மெதுவாக விசும்பத் துவங்கியவளின் செய்கையில், "ம்ப்ச், இப்போ எதுக்கு அழற? ட்ரைவர் வேற இருக்கான்ல.." என்று கடிந்துக் கொள்ளவும், அவனை ஒரு முறை முறைத்தவள் உனக்கு மட்டும் தான் வேடிக்கைப் பார்க்கத் தெரியுமா, எனக்கும் தெரியும் என்பது போல் பிடித்திருந்த அவனது கையை உதறியவளாய் தானும் அவளின் புறம் இருந்த ஜன்னலை நோக்கித் திரும்பினாள்.

அவளின் கோபம் புரிந்தும் அவன் சட்டை செய்யவில்லை.

ஒரு வழியாகச் சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளித்து ஷிவாவின் இல்லத்தைக் கார் அடைய, வாயிலில் ஆலம் கரைத்து வைத்து அவர்களுக்காகக் காத்திருந்த பெண்களைக் கண்டு தன் முகத்தில் ஒரு கட்டாய மலர்ச்சியைக் கொண்டு வந்தாள் சிதாரா.

"வாம்மா, வலது காலை எடுத்து வச்சு வா.."

ஏற்கனவே அவள் ஒரு முறை இந்த வீட்டிற்கு வந்திருக்கின்றாள். அதுவும் ஏறக்குறைய நள்ளிரவு தொட்ட வேளையில்.

ஆயினும் மகனின் கையால் தாலியை வாங்கி மருமகளாக முதன்முறை வரும் மருமகளுக்கும், யாருக்கு வைத்த விருந்தோ என்பது போல் வேறு இடத்தில் பார்வையைச் செலுத்தியவனாக மனைவியை விட்டு ஒரு அடி தள்ளி நின்றிருந்த மகனுக்கும் சேர்த்து ஆரத்தி சுற்றி அவர்களை உள்ளே வரப் பணித்த சாவித்திரி பூஜை அறைக்குச் சிதாராவை அழைத்துச் சென்றார்.

பிறகு மணமகனின் வீட்டில் மணமக்களுக்கு நடக்கும் சடங்குகளை முறைப்படி அவர்கள் செய்து முடிக்க, இரவு ஏறியதும் முதலிரவிற்கான அலங்காரங்களை துவங்க சாவித்திரிப் பணித்தார்.

ஷிவாவின் தங்கையான தெய்வாம்பிகையும், துர்காவும் இணைந்து அவளுக்கு உதவி செய்ய, வெளிர் ஃப்யூஷா பிங்க் [pastel fuchsia pink mulberry silk saree] நிற மல்பரி சில்க் புடவையை உடுத்தியவள் அதற்கேற்றார் போன்று அணிகலன்களையும் அணிந்துக் கொண்டாள்.

இயற்கைத் தன் வரங்களை அவளின் உடல் முழுவதுமே அள்ளித் தெளித்திருந்ததில் மல்பரி சில்க் புடவையில் தெய்வீகத்தன்மையுடன் கவர்ச்சியும் கலந்ததில் வசீகரித்த அவளின் அழகில் பெருமைப் பொங்க பார்த்தாள் தெய்வாம்பிகை.

அவளின் பார்வை கூறும் அர்த்ததில் வெட்கத்தில் முகம் சிவந்தாலும், காலையில் மணமுடித்த பெண்ணின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி அவளிடம் இல்லை என்பதை உணர்ந்தவள் போல் கண்ணாடியின் முன் அமர்ந்திருந்த தோழியின் தோள்களைப் பின்னால் இருந்து மென்மையாகப் பற்றினாள் துர்கா.

"என்ன ஆச்சு சிதாரா? ஏன் ஒரு மாதிரியா இருக்க?"

தோழியின் வினாவில் சடக்கென நீர் விழிகளில் எட்டிப்பார்க்க, அவளின் கண்ணீரில் பதட்டமடைந்தனர் பெண்கள் இருவருமே.

"என்ன அண்ணி ஆச்சு? ஏதும் பிரச்சனையா?"

"சிதாரா, என்னன்னு சொன்னாத்தானே தெரியும், சொல்லுப்பா?"

இருவரும் கேட்க, கண்ணாடியில் தெரிந்த அவர்களின் பிம்பங்களைப் பார்த்தவள், ஆழ இழுத்து பெருமூச்சுவிட்டு, "ஒண்ணும் இல்ல, அம்மா அப்பா நியாபகம் வந்துடுச்சு.." என்றதுமே, சிரித்து வைத்தாள் அவள் நார்த்தனார்.

ஆனால் துர்காவின் மனதில் மட்டும் ஏதோ சரியில்லை என்று தோன்ற, பதிலெதுவும் கூறாது அலங்காரங்களை முடித்தவள் அவளுக்கும் சிதாராவிற்குமான தனிமையை எதிர்பார்த்துக் காத்திருக்க, அவள் எதிர்பார்த்தது போல் அன்னையை அழைக்கக் கீழறைக்குச் சென்றாள் தெய்வாம்பிகை.

"ம்ம்.. இப்ப சொல்லு, ஏன் அழுத?"

"அதான் சொன்னேனே.."

"ஆமா சொன்ன, ஆனால் இப்ப உண்மையைச் சொல்லு."

தோழியின் கனிவு ததும்பும் விழிகளைப் பார்த்த சிதாராவிற்கும் ஆறுதல் வேண்டும் போல் இருக்க, அதற்கு மேலும் தாங்க இயலாதவளாகக் கன்னங்கள் தொட்டு வழியும் கண்ணீருடன் துர்காவின் கரத்தை பிடித்தவள்,

"எங்க அப்பா ஒரு பாலிட்டிஷியன். இவர் ஒரு எஸ்.எஸ்.பி. இரண்டு பேரும் இரு துருவங்கள் மாதிரின்னு எனக்குத் தெரியும். இருந்தும் அப்பா எங்க கல்யாணத்துக்குச் சம்மதிச்சாங்கன்னா, அதுக்கு ஒரே காரணம் என் மேல் இருக்கும் பிரியம் தான். ஆரம்பத்தில் அப்பா எங்க கல்யாணத்துக்குச் சம்மதிக்கவே இல்லை. ஆனால் நான் பெரும்பாடுபட்டு அவரைக் கன்வின்ஸ் பண்ணி தான் சம்மதிக்க வைச்சேன்.

அப்படிப்பட்டவரை இவர் ஏத்துக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் வயசுக்கு மதிப்புக் கொடுத்தாவது அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருக்கலாம் இல்லையா? அட்லீஸ்ட் அவர்கிட்ட சொல்லிட்டாவது வந்திருக்கலாம் இல்லையா? பிடிக்காத மாதிரி முகத்தைத் திருப்பி வச்சிக்கிட்டாரு, அதான் இனி இவங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கப் போறாங்களோன்னு ரொம்பப் பயமாயிருக்கு துர்கா." என்றாள்.

"அதான் இந்தக் கவலையா?"

"அதுமட்டும் இல்ல துர்கா. நீக் கூடப் பார்த்திருப்ப. காலையில் இவர் சந்தோஷமாத் தான் இருந்த மாதிரி தெரிஞ்சுது. என் கழுத்தில் தாலிக் கட்டும் போது கூட அவர் முகம் மலர்ச்சியா தான் இருந்தது. ஆனால் திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியலை மூட் அப்செட் ஆன மாதிரியே நடந்துக்கிட்டார். ஏன்னு கேட்டால் பதில் சொல்லவும் மாட்டேங்குறார், அதான் வேறு எதுவும் பிரச்சனையோன்னு வேற பயமாயிருக்கு.."

"சிதாரா. எங்க ஷிவா மாமா எப்பவுமே அப்படித்தான். இன்னும் சொல்லப் போனால் அவர் எப்பவுமே இறுக்கமாத்தான் இருப்பார். ரொம்ப மகிழ்ச்சியா, ஜாலியா இருக்கிற டைப் அவர் இல்லை. இதை நான் உனக்குச் சொல்லித் தெரியணும்னு அவசியமும் இல்லை. எனக்குத் தெரிஞ்ச வரை அவர் உன்கிட்ட மட்டும் தான் கொஞ்சம் இலகுவா பேசுற மாதிரி தெரியுதுன்னு எங்க வீட்டுல கூட எல்லாரும் பேசிக்கிட்டாங்க. அதனால் அவரைப் பத்தி நீ ரொம்பக் கவலைப்படறதை விடு. கண்டிப்பா நீ வருத்தபடுற மாதிரி அவர் எதுவும் செய்ய மாட்டார்."

"ஏனோ அந்த நம்பிக்கை எனக்கு இல்லையோன்னு தோணுது துர்கா."

"ஏன் சிதாரா அப்படிச் சொல்ற? கொஞ்சம் யோசிச்சுப் பாரு. எனக்கும் அவருக்கும் கல்யாணம்னு முடிவு பண்ணி, மணமேடை வரை வந்தவங்க நாங்க. ஆனால் அதற்குப் பிறகு எனக்குக் கல்யாணம் வேண்டாம்னு நான் எடுத்துச் சொன்னதும் ஒரு புரிதலுடன் அவர் அதை ஏத்துக்கிட்டார். இது வரை அதற்கான காரணத்தை அவர் என்னிடம் நேரிடையா கேட்கலை. அதே போல் இது மாதிரியான சூழலில் கூட அவர் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டாருன்னா அவருக்கு உன் மேல் உள்ள விருப்பம் தான் காரணம்.

இதைப் பார்க்கிறவங்க என்ன வேணாலும் நினைச்சிக்கட்டும். எப்படி வேணாலும் நம்மைப் பத்தி பேசிக்கட்டும். ஆனால் எனக்கும் அவருக்கும் உனக்கும் மட்டும் தான் தெரியும் நம்முடைய உன்னதமான பாசமும் தூய்மையான மனசும். உங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கும் ஆத்மார்த்தமான காதல் எனக்கு மட்டும் தான் புரியும். அதனால் தான் சொல்றேன், எதையும் போட்டுக் குழப்பிக்காம சந்தோஷமா ஷிவா மாமாவோட உன் வாழ்க்கையை ஆரம்பி. எல்லாம் நல்லபடியா நடக்கும்."

ஆறுதல் அளித்தவள் சிதாராவின் தளர பின்னியிருந்த சடையில் மல்லிகைச் சரங்களைச் சூட, அதற்குள் அவர்களின் அறைக்குக் கையில் பால் சொம்போடு வந்தார் சாவித்திரி.

மாமியாரின் பாதங்களில் விழுந்து மீண்டும் ஆசிர் வாங்கிய சிதாரா பாலை எடுத்துக் கொண்டு கணவனின் அறைக்குச் செல்ல, கதவைத் தட்டியதுமே, "வா.." என்று மட்டும் கூறிய குரலில், அந்த ஒரே வார்த்தையில் எவ்வளவு அழுத்தம் இருந்தது என்பதை உணர்ந்தவளின் அடிவயிற்றில் பயப்பந்து ஒன்று உருளத் துவங்கியது.

அது வரை துர்கா சொன்ன ஆறுதல் வார்த்தைகள் கூடக் காற்றோடு கலந்தது போல் தோன்றியது.

மெல்ல கதவைத் திறந்தவள் உள்ளே நுழைய, அங்குப் படுக்கை அறை முழுவதுமே ரோஜா மற்றும் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தாலும், அதற்கு அருகில் நின்றவனாய் அலைபேசியில் எவருடனோ கிட்டத்தட்ட இரகசியக் குரலில் பேசிக் கொண்டிருந்த ஷிவா திரும்பியும் பார்த்தான் இல்லை.

கதவை மூடி தாழிட்டவள் அவனுக்கு அருகில் சென்றவளாய் அமைதியாக நிற்க, அவளின் அரவத்தில் அலைபேசியில் பேசியவாறே மெள்ள திரும்பியவன் அவளின் வசீகரத்தில் ஸ்தம்பித்துப் போய் விநாடிகள் சில சிலையாகித்தான் போனான்.

ஆயினும் பிரமிப்பில் விரிந்த அவனது கண்கள் சட்டென மலைப்பைத் துடைத்து இடுங்கின.

"ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசிட்டு இருக்கேன் சிதாரா. நீ வெயிட் பண்ணு, நான் வந்துடுறேன்.."

கூறியவன் பால்கனிக்குச் செல்ல எத்தனிக்க, "பால் ஆறப்போகுது.." என்றவளை அசட்டை செய்தவனாய் வெளியேறியதில் திரும்பவும் மனம் தொய்ந்து போனது பெண்ணவளுக்கு.

பால் சொம்பை அருகில் இருந்த மேஜையில் வைத்தவள் அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் அமர, பார்வைக்கு விருந்தாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரோஜா மலர்களும், தூவிவிடப்பட்ட மல்லிகை பூக்களும் அவளைப் பரிதாபமாய்ப் பார்ப்பது போல் இருந்ததில் மனம் நொந்துப் போனாள்.

'ஒருவேளை இவருக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லையா? நான் தான் ரொம்ப இவரை ஃபோர்ஸ் பண்ணிட்டேனா?'

இதயம் பல கேள்விகள் கேட்க பதில் கூற வேண்டியவனோ அவளை மதியாது வெளியில் சென்றிருந்தான்.

ஆனால் பால்கனியில் காதுக்கு நெருக்கமாய் அலைபேசியை வைத்துப் பேசிக் கொண்டிருந்தவனின் உள்ளமோ மறுமுனையில் கூறப்பட்ட செய்திகளில் கொதிநிலைக்குச் சென்று கொண்டிருந்தது.

விநாடிகள் நிமிடங்களாகப் பிறப்பு எடுக்க, தனக்கருகில் இருந்த ரோஜாப்பூக்களைக் கையில் எடுத்தவள் அவற்றின் ஒவ்வொரு இதழையும் அவற்றுக்கு நோகக்கூடாது என்பது போல் மிருதுவாய் கொய்தவாறே கட்டிலில் தனக்கு அருகில் இதய வடிவத்தில் அடுக்கிக் கொண்டிருக்க, நெடு நேரம் சென்று உள்ளே நுழைந்தவனுக்கு அவளின் சிறுபிள்ளைச் செயல் ஏனோ இதயத்தில் ஒரு புத்துணர்ச்சியைக் கொணர்ந்தது.

அக்கணம் வரை இருந்து வந்த இறுக்கமும் மெள்ளத் தளர்ந்தது.

அலைபேசியை அறையின் மூளையில் இருந்த இறுக்கையில் வீச, அவனது சத்தத்தில் விருட்டென்று எழுந்தவள் அவனைத் திரும்பிப் பார்க்க, அகன்று விரிந்த மார்புடனும், சிறு முறுவலுடனும், நெடுநெடுவென்ற உயரத்தில் நடந்து வந்தவனின் தோற்றம் சந்தோஷத்திற்குப் பதில் தவிப்பையே உருவாக்கியது.

"பால் ஆறிடுச்சா?"

அவனது கேள்வி அவளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த சண்டைக் கோழியைச் சீண்டிவிட்டது போல் இருந்தது.

"நாளைக்கு வந்து கேளுங்க.."

வெடுக்கெனக் கூறியவளை நெருங்கியவன் தன் சூடான சுவாசம் அவளின் முகத்தில் வீசும் அளவிற்கு உரசியவனாய் நிற்க, இப்பொழுது எகிறுவது அவளது முறையானது.

அவனது நெஞ்சில் கை வைத்தவள் அவனைத் தள்ளிவிட்டு நகர, அவளின் கோபத்தில் குறுஞ்சிரிப்பு சிரித்தவன் தான் அணிந்திருந்த வெள்ளை நிற முழுக்கைச் சட்டையின் காலரை இழுத்துவிட்டு கழுத்தை சாய்த்துப் பின் நிமிர்ந்து நிற்க, அவனது செய்கையைக் கண்டு உள்ளுக்குள் அஞ்சினாலும் வெளியில் காட்டாதவளாய் அவர்களின் அறையில் ஒரு பக்கத்தில் வைத்திருந்த ட்ரெஸிங் டேபிளை நோக்கி விடுவிடுவென்று நடந்தாள்.

“அங்கேயா பால் வச்சிருக்க?”

“இல்லை.. கீழ ஊத்திட்டேன்..”

திரும்பியும் பாராது கூறியவள் ட்ரெஸிங் டேபிளின் முன் நிற்க, அதனில் தெரிந்த அவளது பிம்பத்தின் மீது தாபம் வழியும் கண்களைப் பதித்தவாறே, சிரித்துக் கொண்டே, “பால் சொம்பு இங்க இருக்கே..” என்று அருகில் இருந்த மேஜையை நோக்கி தலையை அசைத்துச் சைகை காட்டினான்.

“அது வெறும் சொம்பு தான்.. நாளைக்குச் சுட சுடப் பால் கொண்டு வரேன். இப்போ பேசாமல் போய்ப் படுங்க..”

“நம்ம ஃபர்ஸ்ட் நைட் இன்னைக்குத் தான்.. நாளைக்கு இல்லை..”

“பரவாயில்லை, அந்தளவுக்காகவாவது நியாபகம் இருக்கே.."

சலித்துக் கொண்டவளின் சிவந்த நிற தேகத்திற்கு அவள் அணிந்திருந்த பேஸ்டல் பிங்க் நிற மல்பரி புடவை கட்டியிருப்பதைப் போன்றே தெரியாமல் தேகத்துடன் இழைந்து மறைந்து போயிருந்ததில், ஆடவனின் காமமும் தலை தூக்கியது.

இதனில் அதற்கு ஏற்றவாறு பச்சை நிற மரகத [emerald] அணிகலன்களை தெய்வாம்பிகை அணிவித்திருக்க, விண்ணுலகத்து அப்சரஸ் போன்ற அழகுடன் ட்ரெஸிங் டேபிள் கண்ணாடியின் முன் நின்றிருந்தவளின் பின்னழகு பித்தம் கொள்ளச் செய்தது.

கணவன் தன்னையே விழுங்கிவிடுவது போல் பார்த்திருப்பதில் கர்வம் கொண்டாலும், சட்டை செய்யாதவளாய் ஒவ்வொரு அணிகலன்களாகக் கழற்றிக் கொண்டிருந்தவள் பளிச்சென்று இருந்த கழுத்தணியைக் கழற்ற எத்தனித்தவள் திணறிப் போனாள்.

அவ்வளவு கெட்டியாய் இருந்தது அதன் கொக்கி.

எவ்வளவு முயன்றும் கழற்ற முடியாது இருந்ததில்,

"இவ்வளவு நகை வேண்டாமுன்னு சொன்னா கேட்குறாங்களா இந்த அம்மா. ஃபர்ஸ்ட் நைட்டுக்கு இதைப் போட்டுக்கச் சித்துன்னு பிடிவாதமா சொல்லிட்டு போறாங்க." என்று முனக, அவளின் புலம்பல் தெளிவாய் கேட்டதில் ஷிவாவின் முகத்திலும் முறுவல் அதிகமானது.

அவளை நெருங்கியவன், "இங்க கொடு.." என்றவனாய் அதனைக் கழட்ட எத்தனிக்க, "ஒண்ணும் வேண்டாம், நானே கழட்டிக்கிறேன். நீங்க வழக்கம் போல் முகத்தைச் சிடுசிடுன்னு தூக்கி வச்சிட்டு போய் உட்காருங்க.." என்றாள்.

சன்னமாய்ச் சிரித்தவனாய் அவளது கரங்களை நெக்லஸில் இருந்து பிடிவாதமாய் அகற்றி அதனைக் கழற்றியவாறே அச்சூழ்நிலைக்கு ஏற்ற பாட்டை விசிலாக ஊதினான்.

என்னத்தான் அழகாய் தமிழில் பேசினாலும் அவ்வளவாகத் தமிழ் திரைப்படங்களைப் பார்த்திராதவளுக்கு அது எந்தப் படத்தின் பாடல் என்று புரியவில்லை.

"நீங்க ஒண்ணும் கழட்டவும் வேணாம், விசில் ஊதவும் வேணாம்."

அலுப்புடன் கூறியவளின் செவிகளை நோக்கி சற்றே குனிந்தவன், "இது என்னுடைய ஃபேவரைட் பாட்டு. இனி நீ இதை அடிக்கடி கேட்டுத்தான் ஆகணும்." என்றான்.

"உங்க ஃபேவரைட்டாவே இருக்கட்டும், ஆனால் இப்போ வேணாங்கிறேன்."

"விசில் ஊதுனதுக்கே இவ்வளவு கோபப்படுற. இதுல இந்தப் பாட்டோட அர்த்தத்தைக் கேட்டால் செம்ம டென்ஷன் ஆகிடுவ போல இருக்கே.."

அவனை நோக்கித் திரும்பியவள் அவனது கைகளில் பிடித்திருந்த நெக்லஸை வாங்கியவளாக என்ன பாட்டு என்பது போல் அவனைப் பார்க்க, அதனைத் தன் வசீகரிக்கும் கம்பீரக் குரலில் அவளின் செவிகளின் ஓரம் குனிந்து பாடியவனின் பாடலில், அதற்கான அர்த்தங்களில் நாணத்தில் துடித்துப் போனாள் பெண்ணவள்.

"ராப்போது ஆனது

ராத்தூக்கம் போனது

பூப்போல தூறுது

பூங்காற்று சேருது

ஏணிகள் இன்றியே ஏறுது வெட்பமே

ஏணிகள் இன்றியே ஊறுது உள்ளமே

ஏதோ ஏதோ எண்ணம் வந்தாச்சி

ஒஹ்ஹ்வ்வ்... ஒஹ்ஹ்வ்வ்...ஒஹ்ஹ்வ்வ்...!!

ராப்போது ஆனது

ராத்தூக்கம் போனது


சில்லென்று வீசுது வாடை

நில்லாமல் நீங்குது ஆடை

பூமேனியை நீ பார்க்க வா

சிக்கென்று கைகளை வைத்து

என்னை நீ உன்னுடன் தைத்து

பால் ஆழியில் நீராட்ட வா

மழைச் சரம் விழும் என வேகும் நிலமிது

மணம் வரும் தொடும் என வாடும் நிலவிது

நிலம் நீங்காது கூடும் நிழலிது

ராப்போது ஆனது

ராத்தூக்கம் போனது

பூப்போல தூறுது பூங்காற்று சேருது.."

அனலென வெட்கமும் கூச்சமும் மேனியைத் தகிக்கச் செய்ய, அதனைக் காட்டிக் கொள்ள இயலாதவளாய் தடுமாறியவாறே அவனை ஏறெடுத்து நோக்கியவள் முறைக்க, ஷிவாவின் உதடுகளில் அவளை வென்றுவிட்ட செருக்குப் புன்னகைத் தோன்றியது.

“என்ன சிரிப்பு?”

“உனக்கு இந்தளவுக்குத் தமிழ் புரியும்னு நான் நினைக்கவே இல்லை.”

“ம்ப்ச். இந்தக் கிண்டல் எல்லாம் வேண்டாம்.”

“நான் கிண்டல் பண்ணலைடி. நிஜமாவே தான் சொன்னேன்.”

“எல்லா வார்த்தைகளும் புரியலை, கொஞ்சம் கொஞ்சம் தான் புரிஞ்சது. ஆனால் அதுவே போதும். சரி, அதை விடுங்க. வெறும் ட்ரெஸிங் டேபிள் மட்டும் தான் இருக்கு. ட்ரெஸிங் ரூமுன்னு எதுவும் இல்லையா?”

"எதுக்கு?"

"ம்ம்ம், ட்ரெஸிங் ரூம்ல என்ன பண்ணுவாங்க?"

"என்ன வேணாலும் பண்ணலாமே.."

"இந்த டபுள் மீனிங் டயலாக் எல்லாம் எனக்கு வேண்டாம், ரூம் இருக்கா இல்லையான்னு மட்டும் சொல்லுங்க.."

கூறியவளாய் சுற்றுமுற்றும் பார்க்க, அங்கு ஒரு பக்கச்சுவரில் போடப்பட்டிருந்த திரைச்சீலைக்குப் பின் இருந்த அறைக் கண்களில் பட்டதும் காலையில் அவள் அணிவதற்கு என்று மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த புடவையைக் கையில் எடுத்தாள்.

அவளின் எண்ணம் அவனுக்குப் புரிந்தது.

ஆயினும் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு. "இப்போ ட்ரெஸிங் ரூம் எதுக்குன்னு கேட்டேன்." என்றேன்

"இது என்ன கேள்வி? ட்ரெஸ் மாத்தறதுக்குத் தான்."

"அது தான் இப்போ எதுக்கு ட்ரெஸ் மாத்துறன்னு கேட்குறேன்?"

நின்று அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு பதிலொன்றும் கூறாது கதவைத் திறந்து உள்ளே சென்றவளாய் கதவை மூட எத்தனித்தாள்.

ஆனால் நொடியில் ஒரே எட்டில் அவளை அடைந்தவன் கதவை மூட முடியாதளவிற்குக் குறுக்கால் கையை வைத்து தடுத்தவாறே மீண்டும் கவர்ச்சியான சாரீரத்தில் பாடினான்.

“கண்ணா உன் கட்டுடல் வண்ணம்

கண்டாலே கன்னியர் எண்ணம்

உன்னோடு தான் பின்னோடுமே

கற்கோயில் சிற்பமோ என்ன

கல்லுட்ற மார்பகம் கண்டு

என் ஆசை தான் போராடுமே

இதோ இதோ இதழ் தரும் ஈச்சம் பழரசம்

வேண்டும் சுவை எவை அவை ஆகும் இலவசம்

கரை காணாது காதல் பரவசம்..”

அவனது வேகம் அவளைத் திடுக்கிடச் செய்தது.

இப்பொழுது அவனது பாடிய பாடலின் வரிகளில் பல தெளிவாய் புரிந்ததில் மீண்டும் உடல் வெட்கத்தில் நெளிந்தது.

"இப்ப நீங்க பாடுற பாட்டோட வரிகளுக்கு எனக்கு நல்லாவே அர்த்தம் புரியுது.”

“வெரி குட். ஆனால் இந்தப் பாட்டை நீ தான் பாடணும், அதுவும் என்னைப் பார்த்து. தினமும் பாடினாலும் சரி. எனக்கு ஒண்ணும் பிரச்சனையே இல்லை.”

கூறியவாறே கண்ணைச் சிமிட்டியவன் அவள் சுதாரிக்கும் முன் அவளிடம் இருந்த புடவையை விருட்டென உருவி தூர எறிந்தான்.

“ஐயோ! ஏன் புடவையை இப்படிக் கீழ தூக்கிப் போட்டுட்டீங்க?"

"அது நீ காலையில் கட்டுறதுக்கு வச்சிருக்கிற புடவை."

"தெரியும்.."

"பிறகு அதை எதுக்குடி இப்போ கட்டப்போற?"

"அது என் இஷ்டம்..”

அவளின் வார்த்தைகளுக்கு என்ன பதில் சொல்வது என்று ஒரு நொடி யோசித்தவனின் மனதிற்குள் என்னென்னவோ ஆசைகள் கரை புரண்டு ஓடத் துவங்கியது.

"இனி நீ எந்தப் புடவையை எப்பக் கட்டுறதுன்னு.." என்றவன் சட்டென நிறுத்தி, "இல்லை இல்லை, இனி எப்ப புடவைக் கட்டணும், எப்ப புடவைக் கட்டக் கூடாதுன்னு நான் தான் முடிவெடுக்கணும்..” என்றான்.

"புடவை மட்டும் தானே. மற்ற ட்ரெஸ் எல்லாம் இல்லையே.."

"நான் தெளிவா சொல்லலைன்னு நினைக்கிறேன், புடவை மட்டும் இல்லை, எந்த ட்ரெஸ்ஸும்.. நோ நோ, உன் உடலுக்குத் தேவைப்படும் எந்த ஆடையும்.."

அவனது வார்த்தைகளின் அர்த்தம் புரிந்ததில் பெண்ணவளுக்குக் கூச்சம் புடுங்கித் தின்றது.

நாணமும் அச்சமுமாய் அவனை நோக்கியவள் அவன் பார்வையின் தீட்சண்யத்தைத் தாங்க இயலாதவளாய் அறையைவிட்டு வெளியே வர முனைய, சட்டென அவளை இழுத்தவன் இரு கரங்களிலும் ஏந்தியவனாய்,

“ராப்போது ஆனது

ராத்தூக்கம் போனது

பூப்போல தூறுது பூங்காற்று சேருது

ஏணிகள் இன்றியே ஏறுது வெட்பமே

ஏணிகள் இன்றியே ஊறுது உள்ளமே

ஏதோ ஏதோ எண்ணம் வந்தாச்சி”

என்று மீண்டும் பாடியவாறே படுக்கையில் கிடத்தினான்.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காததால் திகைத்தவள் மின்னல் வேகத்தில் அவன் தன்னைக் கிடத்தியதில் அரண்டுப் போய் அவனைப் பார்க்க, அவளின் அருகில் படுத்தவன் மனையாளின் மிருதுவான கன்னத்தில் மென்மையான முத்தம் பதித்தான்.

“என்னை யாரும் கிஸ் பண்ண வேணாம்.”

“ஆனால் இன்னைக்கு நம்ம ஃபர்ஸ்ட் நைட்டுன்னு சொன்னாங்களே..”

“ஃபர்ஸ்ட் நைட்டுன்னா கிஸ் பண்ணித்தான் ஆகணுமா?”

"அஃப்கோர்ஸ்.."

"ஆனால் அது இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்டுன்னு நியாபகம் இருக்கிறவங்களுக்கு.."

அவளின் கோபம் புரிந்தது. அவளின் கலக்கங்களும் புரிந்தது.

திருமணம் நடந்த அன்றே அவளை வருத்தப்படுத்தியதை எண்ணியவனாய் போதும் அவளைச் சீண்டியது என்று முடிவெடுத்து இறங்கி வந்தான், அந்தக் காவலதிகாரி.

"ஐ ஆம் சாரி டி. உன் கோபம் எனக்குப் புரியுது. பட், என்னால் உன்கிட்ட இப்ப எதுவுமே சொல்ல முடியாது. It's very confidential. புரிஞ்சுக்க.."

மீண்டும் அவன் முத்தமிட, ஈரத்துடன் அவன் உதடுகளால் ஒத்தியெடுத்த கன்னங்கள் சில்லிட்டுப் போயிருக்க, முதன் முறை அவன் இட்ட முத்தங்கள் அவளது உயிர் வரை சென்று உருக்கியதுதான்.

இருந்தும் அவனது பாராமுகமும், இன்று மதியத்தில் இருந்து இரும்பாய் மாறியிருந்த தோற்றமும் அளித்த வேதனையை அவளால் மறக்க இயலவில்லை.

தன்னை விட்டு மெல்ல அவனை விலக்கியவள்,

"நம்மக் கல்யாணத்துல உங்களுக்கு இஷ்டம் இல்லையோ, நான் உங்களை ரொம்ப ஃபோர்ஸ் பண்ணிட்டேனோன்னு பயந்துப் போயிட்டேன்.." என்றாள் சஞ்சலத்துடன்.

"இதென்ன பேச்சு.. பிடிக்கலைன்னா நான் உன்னைக் கல்யாணம் பண்ணிருப்பேனா? கண்டதையும் யோசிச்சு குழம்பிக்காத சித்து. இது வேற விஷயம். இதுக்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை."

ஏற்கனவே அவனது முத்தங்களில் நாடி நரம்பெல்லாம் கிறங்கியிருக்க, இப்பொழுது அவன் முதன்முறையாகச் செல்லமாகச் சித்து என்றழைத்தது வேறு அவளை மயங்கச் செய்தது.

"உங்களுடைய ஃப்ரொஃபஷன் எனக்குத் தெரியும். கண்டிப்பா அதில் நான் தலையிட மாட்டேன். ஆனால் எதுக்காகவும் என்கிட்ட பேசாமல் மட்டும் இருக்காதீங்க. என்னால் தாங்க முடியாது."

அழுதுவிடுவது போல் கூறவும் எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன், அவளைத் தன் அகன்ற மார்பில் போட்டுக் கொண்டான்.

அவ்வறையில் ஷிவாவின் இதய ஓசை மட்டுமே பெண்ணவளுக்குக் கேட்டுக் கொண்டிருக்க, இவனைத் திருமணம் செய்வது எல்லாம் கனவிலும் நடவாத காரியம் என்று அஞ்சியிருந்தவளுக்கு இக்கணம் கேட்டுக் கொண்டிருக்கும் அவனது இதயத்து ஓசை மயக்கும் இசையாகவே ஒலித்துக் கொண்டிருந்தது.

நிமிடங்கள் சில அமைதியாகக் கடந்து போகத் தன் மார்பில் தலை சாய்த்திருந்தவளை நோக்கிக் குனிந்தவன், திடுமென, "சித்து, நீ வருணைப் பற்றி என்ன நினைக்கிற?" என்றான்.

"கடவுளே! திரும்பவுமா?”

“ம்ப்ச். சொல்லுடி.”

“ஏன் திடீர்னு இப்போ அவரைப் பற்றிக் கேட்குறீங்க?"

"பெண்கள் விஷயத்தில் அவன் எப்பவுமே ரொம்ப நல்லவன்னு நீ அடிக்கடி சொல்வ. அன்ட் ஆல்ஸோ நானும் கேள்விப்பட்டிருக்கேன். தொழிலில் அவன் நேர்மையானவன் இல்லை, ஆனால் பெண்கள் என்று வந்துவிட்டால் மட்டும் எப்பவும் பல அடிகள் விட்டு தள்ளியே இருப்பான்னுக் கேள்விப்பட்டு நானே ஆச்சரியப்படிருக்கேன்."

"ஆமாங்க, எங்க அப்பாவும் இதையே தான் அடிக்கடி சொல்வாங்க. இன்ஃபேக்ட் வருணை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு என்கிட்ட கேட்கும் போது கூட, அரசியலில் அவர் இல்லைன்னாலும் பல பெரிய அரசியல்வாதிங்களுக்கு அவர் ஏறக்குறைய ஒர் காட்ஃபாதர் [Godfather] மாதிரி, எத்தனையோ சினிமா நடிகைகள், பெரும் பணக்காரர்களின் வாரிசுகள், இளம்பெண்கள் அவரை நெருங்க முயற்சி செய்தும் அவங்களை எல்லாம் அவர் சட்டையே பண்ணினது கிடையாது. அதனால் அவரை நீ கல்யாணம் செய்துக்கிட்டின்னா அவர் உனக்கு மட்டுமே உரியவரா இருப்பாருன்னு அப்பா சொன்னாங்க. ஒரு வேளை அதுக்கூட நான் கல்யாணத்துக்குச் சம்மதிக்கக் காரணமா இருக்கலாம்னு நான் ஒரு நாள் நினைச்சிருக்கேன்."

கூறியவளின் முகத்தைத் தன் நெஞ்சில் இருந்து நிமிர்த்தியவன், மலர்ச்சியைச் சற்று ஒதுக்கி வைத்து,

"உங்க அப்பாவோட சந்தோஷத்துக்காகத் தான் அவனைக் கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டேன்னு சொன்ன.." என்று ஆழ்ந்தப் பார்வையுடன் கேட்டதில் அவனது பொறாமை அவளது அடங்கா காதலை திமிறி எழச் செய்தது.

அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டவளாய் மீண்டும் அவன் மார்பில் தலை சாய்த்தவள், "ஒரே ஒரு தடவைத்தான் அப்படித் தோணுச்சுன்னு சொன்னேன்.." என்றாள்.

"ஒரு தடவையாவது அவன் பேரில் உனக்கு நல்ல அபிப்பிராயம் வந்திருக்குன்னு சொல்லு.."

அவனது வார்த்தைகளில் அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

"இப்ப எதுக்குடி சிரிக்கிற?"

"உங்களை நான் விரும்புறேன், உங்களைத்தான் நான் கல்யாணம் செய்துக்குவேன்னு பிடிவாதம் பிடிச்சப்ப, எங்கப்பா கடைசியா சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? ஷிவ நந்தனைப் பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் 83 என்கவுண்டர் பண்ணின ஒரு போலிஸ் ஆஃபிசர். குற்றவாளிகளாவே அவர்கள் எல்லாரும் இருந்தாலும் மனிதர்கள் அவர்கள், மனித உயிர்களுக்கு அவ்வளவு தான் மதிப்புக் கொடுக்குறவர் அவர். அவரைப் போய் நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றியேன்னு கேட்டார். ஆனால் அதே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் நடுகாட்டில் நான் மாட்டிக்கிட்டு தவிச்சப்போ ஒரு சின்னப் பெண்ணைப் பார்த்துக்குற மாதிரி என்னை அவர் மாரில் போட்டு அவ்வளவு பாதுகாப்பா என்னை அரவணைச்சிக்கிட்டாருப்பா. இதுக்கு மேல் ஒரு ஆணிடம் நான் என்ன எதிர்பார்க்கப் போறேன்னு சொன்னேன். ஸோ, ஒரு பெண்ணுக்கு எது தேவையே அது உங்களிடமும் இருந்தது, வருணிடம் இருந்தது. அதனால் கூட எனக்கே தெரியாமல் நான் வருணைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சு இருக்கலாம்.." என்றவளாய் அவன் நெஞ்சில் சாய்ந்தவாறே அண்ணாந்து பார்த்தவள்,

"நான் எதையும் மறைக்க விரும்பலைங்க. என் மனசுல என்ன இருந்ததோ அதை உங்களிடம் வெளிப்படையா சொல்ல விரும்பினேன், அவ்வளவு தான். ஆனால் அதற்காக இப்பவும் என் மனசுல எங்கேயோ ஒரு மூலையில் வருண் இருக்காருன்னு நீ நினைச்சீங்கன்னா, அது தப்பு. நீங்க போலீஸ் மூளையோடு யோசிக்கிறீங்கன்னு தான் அர்த்தம். நிச்சயமா என் மனசு முழுசும் இருக்கிறது நீங்க தான், நீங்க மட்டும் தான்.." என்றாள் அழகாய் கண்களை மூடித்திறந்து.

ஒரு நேர்மையான காவலதிகாரியான ஷிவாவிற்கு அவனது மனையாளின் வெளிப்படையான பேச்சு அவ்வளவு பிடித்துப் போனது.

அவளின் உச்சந்தலையில் மென்மையாக முத்தமிட்டவன், பெருமூச்சுவிட்டு,

"ஆனால் அப்படிப்பட்ட வருண் இப்போ ஒரு பெண் மீது காதல் வயப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்குன்னு சொன்னால் உன்னால் நம்ப முடியுதா?" என்றதுமே பகீரென்று இருந்தது சிதாராவுக்கு.

அதுவரை இருந்து வந்த தாபமும் மயக்கமும் கலைந்துப் போவது போல் தோன்றியது.

அன்று துர்காவிடம் உனக்கும் வருணுக்கும் இடையில் ஏதாவது இருக்கின்றதா என்று கேட்ட வேளையில் அவளது அசாத்திய மௌனம் சிதாராவிற்குச் சந்தேகத்தை வரவழைத்தது.

அந்தச் சந்தேகம் வருணின் மேல் அல்ல.

அவனும் அவ்வளவு எளிதில் காதல் வயப்படுபவனும் அல்ல.

அவ்வாறு அன்று எண்ணியவளுக்கு ஒருவேளை நாம் கதைகளில் கேட்டது போல், திரைப்படங்களில் பார்த்தது போல், Stockholm syndrome என்ற நிலையினால் கடத்தியவனின் மீது துர்கா தான் காதலில் விழுந்துவிட்டாளோ என்ற ஐயுறவும் தோன்றத்தான் செய்தது.

ஆனால் இப்பொழுது இவர் கூறுவதைப் பார்த்தால், காதலில் விழுந்தது துர்கா மட்டுமல்ல, வருணும் என்றல்லவா தெரிகிறது.

யோசனையில் ஆழ்ந்தது போல் வார்த்தைகளற்று இருந்த மனைவியின் மௌனத்தில் புருவங்கள் இடுங்க அவளின் தாடையைப் பற்றியவன் அவளது வதனத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தினான்.

“என்னாச்சு?”

“நீங்க சொல்றதை என்னால் நம்பவே முடியலைங்க..”

“ஆனால் அது தான் உண்மையா இருக்குமோன்னு கொஞ்சம் சந்தேகமா இருக்கு.”

"யார் மேலங்க வருணுக்கு லவ் வந்திருக்கும்?"

"தெரியலை சித்து."

"சரி உங்களுக்கு இது எப்படித் தெரிஞ்சது?"

"இஃன்பார்மர் மூலமா.."

"அதைப்பத்தி இப்போ ஏன் பேசுறீங்க? ஒருவேளை அவருக்கு என் மேல் லவ் வந்திருக்குமுன்னு சந்தேகப்படுறீங்களா?"

அவளது கேள்வி இதற்கு மேல் இதைப் பற்றிப் பேசக் கூடாது என்பதைத் தெள்ளென உணர்த்தியது ஷிவாவிற்கு.

"என்ன சித்து? திரும்பவும் இதே மாதிரியான டிஸ்கஷன். துர்காவைக் கண்டுபிடிக்க நீ சில காலமாக அவனைப் பின்தொடர்ந்து வந்ததினால் உனக்குத் தெரியுமான்னு கேட்டேன்.. அவ்வளவு தான்."

"என்னங்க, இந்த நியூசை இன்னைக்குத் தான் கேள்விப்பட்டீங்களா?"

"ம்ம்ம்.."

"அதான் மதியத்தில் இருந்து மூட் அவுட்டா?"

"மூட் அவுட்டுன்னு சொல்ல முடியாது, பட் ஒருவித குழப்பம்."

"சரி, இப்போ உங்க குழப்பத்துக்கு ஏதாவது பதில் கிடைச்சிட்டுதா?"

"குழப்பத்துக்குப் பதில் கிடைக்கலை. ஆனால் குழம்பறதுக்கான நேரம் இது இல்லைன்னு நல்லா புரிஞ்சுடுச்சு."

"எப்படி?"

சிறு பிள்ளையாய் மலங்க விழிந்துக் கேட்கும் மனையாளின் பேரழகிய முகத்தை இமைக்காது பார்த்தவனுக்கு இனியும் நேரத்தைக் கடத்த விருப்பமில்லை.

அவளைத் தன்னைவிட்டு சற்று அகற்றியவனாய் அணிந்திருந்த வெண்மை நிறச் சட்டையைக் கழற்றி கட்டிலிற்குக் கீழ் எறிந்தவன் அவளை மீண்டும் தன் மேல் சாய்த்துக் கொள்ள, தேன் குடிக்கத் துடிக்கும் வண்டு போல் காத்திருக்கும் கணவனின் வெற்று நெஞ்சில் படுத்தவளுக்கு, அவனது மார்பு கேசம் கன்னத்தில் உரசியதில் உணர்ச்சிகள் பேரிரைச்சலுடன் எழுந்து அலை மோதத் துவங்கியது.

மனையாளின் முகம் மாற்றத்தையும், நெஞ்சுக்குள் சுழன்று அடித்த உணர்ச்சிகளின் வேகத்தை மறைக்கத் தன் நெஞ்சில் புதைந்துக் கொள்பவளின் தோற்றத்தையும் கண்டவனுக்கோ சித்தம் பறிபோனது போல் இருந்தது.

ஒரு கரத்தால் பெண்ணவளின் இடையை இறுக்கிப் பிடித்தவனாய் மறு கரத்தை அவள் சூடியிருக்கும் மல்லிகை சரங்களுக்குள் நுழைத்து விளையாடியவாறே,

"ம்ம், நாங்க எல்லாம் அந்தக் காலத்துல ராஜ்புத் இனத்தைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கோம். அவங்களைப் பற்றி நிறையப் படிச்சிருக்கோம். அதிலும் ராஜபுத்திர பெண்கள் எவ்வளவு அழகுன்னு கேள்விப்பட்டுப் பிரமிச்சிருக்கும். ஆனால் அதே ராஜபுத்திர இனத்தில் இருந்து, குறிப்பா சொல்லணும்னா ராஜபுத்திர இளவரசி மாதிரி பேரழகியான ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகிட்டு, இப்படி ஃபர்ஸ்ட் நைட் ரூமில் அவளை என் நெஞ்சிலேயே போட்டுக்கிட்டு என்னென்னவோ தேவையில்லாத பேச்சுக்களைப் பேசி டைமை வேஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்னு இப்ப புரிஞ்சிடுச்சு." என்றான்.

அவனது பதிலில் அதுவரை ஒளிந்து கொண்டிருந்த விரகம் பெண்ணவளின் இதயத்தை மெல்ல நெருங்க, "சரி அதுக்கு இப்போ என்ன செய்யப் போறீ.." என்றவள் முடிக்கவில்லை.

தன் மார்பில் சாய்ந்திருந்தவளின் இடையை இறு கரங்களாலும் பிடித்தவன் அசுரகதியில் அவளைத் தூக்கித் தன்னருகே கிடத்திய அதே வேகத்தில் வேட்கையுடன் அவள் மேல் படர்ந்தவனாய் மிருதுவான செம்பவள இதழ்களை வன்மையுடன் சிறை செய்ததில் திக்குமுக்காடிப் போனாள்.

மூச்சுமுட்டும் முத்த யுத்தத்தில் தோல்வியை விரும்பியே தழுவியவளாய் அவனைத் தன் மேல் அழுத்திக் கொள்ள, பெண்ணவளின் மென்மையான உடற்கூறுகள் அவன் மீது தவழ்ந்ததால் ஏற்பட்ட காமத்தின் சுழற்சியாக உணர்ச்சிகள் அத்துமீற ஆரம்பித்ததில், அவளே அதிரும் வண்ணம் அவளின் புடவையை அவளிடம் இருந்து விலக்கியவன் கணவனுக்கான தேடலை தன்னவளிடம் துவங்கினான்.

முதலில் நாணம் தலைகாட்ட, "என்னங்க ப்ளீஸ் லைட்டை ஆஃப் பண்ணுங்க." என்றவள் அவனது அலட்சியத்தைக் கண்டு அரண்டுப் போனவளாக அவனுக்கு அடியில் தன்னை மறைத்துக்கொள்ள, பிறகு, "என்னங்க மெதுவா.." என்று கெஞ்சத் துவங்கினாள்.

காதலுடன் கலந்திருக்கும் காமம் இத்தனை அழகானதா என்று சிந்தித்தவனுக்கு அவளின் யாசிப்பு மென்மேலும் மோகத்தைத் தூண்ட, "என் ஆக்ரோஷம் புரிந்தும் நான் வேண்டும் என்று போராடியவள் நீ தானே.." என்று கூறியவாறே அந்தக் கள்வன் அவளின் அங்கலாவண்யங்களை மட்டுமல்ல, அவளின் பெண்மையையும் களவாட,

செங்கழுத்தில் தொங்கி அங்குமிங்கும் ஊசலாடிக் கொண்டிருந்த மாங்கல்யம் அவனது உரிமையைப் பறைசாற்றியதில், நான் அவனது உடைமை என்று இதயம் எடுத்துரைக்க, அச்சம் நாணம் மடம் பயிற்பு என்ற நான்கு பண்புகளையும் கணவனிடம் சமர்ப்பித்தாள் அந்த இளம் மங்கை.

காமங் காமம் என்ப காமம்

அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்

கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை

குளகுமென் றாள்மதம் போலப்

பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.

அரிமாக்களின் வேட்டை

தொடரும்.


Ref:
 
Last edited:

Vidhushini

New member
அடேய்களா, உங்க மூணுபோரோட சமரில் மிர்சா சகோதரர்களை உள்ள கொண்டுவந்தீங்க; அதை மறந்ததால் இத்தனை விளைவுகளோ?

அப்போ வருண் விரும்புறது துர்கா-ன்னு ஷிவாவுக்கு உறுதிப்படுத்துற அளவுக்குச் சந்தேகம் வந்துடுச்சு.

Very interesting @JLine @JB sis❤️
 

saru

Member
Lovely update
Daiii aaari wanted ah poi vizhara
Varun ku doubt vandu othunga arambichachu
Siva ku doubt vadruchi Varun lv durgava irukumonu
 

Lucky Chittu

New member
Varun oda love yaarunu kudiya sekiram kandu pidichiduvaan Shiva. Durga Varun chapter eppo arambipeenga mam. Waiting for the next epi mam. Sahana bakshi ya konnathu Mirza brothers nu thonuthu?
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top