JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 8

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை

அத்தியாயம் 8

பொழிவன சோலைகள் புதிய தேன் சில்

விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென

நுழைவன் அன்னவை நுழைய, நோவொடு

குழைவன, பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே.

பால காண்டம் 139

பொருளுரை: சோலைகளில் இருந்த பூக்கள் புதிய தேனைப் பொழியவும் அதை விரும்பிய வண்டுகள் தென்றலுடன் சேர்ந்து மெல்லெனச் சோலைக்குள் நுழையவும் காதலரைப் பிரிந்தவரின் கொங்கைகள் வருத்தத்தினால் வெம்பிக் கொதித்தன.

******************************************************

'We don't meet people by accident. They are meant to cross our path for a reason.'

நாம் சந்திக்கும் மனிதர்களில் சிலர் மட்டுமே நம் வாழ்க்கையோடு பிணைக்கப்படுவார்கள். அவர்களில் சிலர் நமக்குள் பாதிப்பை ஏற்படுத்துவார்கள். சிலர் நம் வாழ்க்கையின் பாதையையே மாற்றக்கூடும். அதுவே பிரபஞ்சப் பிணைப்பு!

****************************************************

சிதாரா சௌஹானின் சிறு வயதில் பள்ளிக்காலங்களின் பொழுது தென்னிந்தியாவிற்குச் சுற்றுலா சென்ற ஒரு நாளில், தஞ்சை பெரியக்கோவிலில் 'We don't meet people by accident. They are meant to cross our path for a reason.' என்பதற்கு ஏற்ப, சந்தித்தாள் துர்க ரூபினியை.

அவளும் தனது பள்ளிச் சுற்றுலாவிற்குத் தஞ்சை பெரிய கோவிலை விஜயம் செய்திருக்க, ஒரு கட்டத்தில் இரு வேறு பள்ளி மாணவர்களையும் அவர்களின் பள்ளி ஆசிரியர்கள் ஒரு இடத்தில் சொல்லி வைத்தார் போன்று வரிசையில் நிற்குமாறு பணித்தனர்.

ஆண்களும் பெண்களுமாய் வட இந்திய மற்றும் தென்னிந்திய பள்ளி மாணவர்கள் இரு கோடுகள் போல் நீண்ட வரிசையாய் அணிவகுத்து நிற்க, தனது தோழியுடன் பேசி சிரித்துக் கொண்டே எதேச்சையாய் தன் மறுபக்கம் திரும்பினாள் துர்கா.

அங்குத் தான் அவன் கண்டாள் சிதாரா சௌஹானை.

சூரியன் உச்ச நிலையை அடைந்திருக்கும் உச்சி வெயில் நேரத்தில் தங்கமாய் ஜொலித்துக் கொண்டிருந்த கதிரவனின் ஒளிக்கதிரில் தகதகவென மினுமினுத்த பதிமூன்று வயது ராஜபுத்திர [Rajput] பெதும்பையைக் கண்டு வியந்தாள் பத்து வயது பேதை துர்கா.

"ஆ! அந்த அக்காவைப் பாருங்களேன்.. ஹப்பா! எவ்வளவு அழகு!!"

தோழிகளிடம் வியந்தவளுக்கு ஏனோ சிதாராவிடம் பேச வேண்டும் என்ற ஆசை துளிர்க்க, ஆனால் கண்டிப்பான ஆசிரியைகளை விட்டு நகர இயலாததால் அந்த ஆசையைத் துறக்க வேண்டியதாயிருந்தது.

சிதாராவின் மீதே பார்வையைப் பதிந்திருக்க, தன் தோழிகளிடம் சிரித்துப் பேசும் போது செம்மையாய் பளபளக்கும் அவளின் அழகிய வதனத்தை விட்டு அசைய மறுத்த கண்களை விலக்க இயலாது நின்றிருந்த துர்காவுக்கு, தனது கண்களில் இருந்து மறைந்து கொண்டிருக்கும் சிதாராவைக் கண்டு ஏக்கமாக இருந்தது.

“சே.. அந்த அக்காக்கிட்ட பேசணும்னு என்னவோ ஆசை ஆசையா வருது. ஆனால் இந்த மிஸ் [teacher] அங்க இங்க போகவே விட மாட்டேங்குறாங்களே..”

தனக்குத்தானே சலித்துக் கொண்டவளாய் ஆசிரியைகள் வழிக்காட்டிய பாதையில் சிறுமியான துர்க ரூபினி நடக்க ஆரம்பிக்க, ஆனால் ஈசனின் திட்டத்தை மீற அவன் படைத்த ஜீவன்களுக்கு சக்தி உண்டோ என்பது போன்றான சம்பவம் அன்று நடந்தது.

கோவிலைச் சுற்றிப் பார்த்தவர்கள் மதிய உணவை உண்பதற்கு நிழலான பகுதி ஒன்றுக்குச் சென்ற அமர, சொல்லி வைத்தார் போன்று வட நாட்டுப் பள்ளியில் இருந்து வந்த பள்ளி மாணவர்களையும் அவர்களுக்கு அருகிலேயே ஒரு இடத்தில் அமரப் பணித்தனர் அவர்களது ஆசிரியர்கள்.

அனைவரும் ஏறக்குறைய அருகருகே அமர்ந்து உண்ணத் துவங்க, தன் பையைத் திறந்துப் பார்த்த துர்கா திருதிருவென்று விழித்தாள்.

அன்று காலையில் வழக்கத்திற்கு மாறாகத் தாமதமாக எழுந்திருந்தவள் காலில் சுடுதண்ணியை ஊற்றியது போல் காலை உணவையும் உண்ணாது வேக வேகமாகக் கிளம்ப, அண்ணை ஸ்ரீமதி வைத்திருந்த டிபன் பாக்ஸை முற்றிலுமாக மறந்துவிட்டு வெறும் பையை மட்டும் எடுத்து வந்திருந்தாள் அந்தச் சிறு பெண்.

காலையில் இருந்து நடந்த நடையில், அதுவும் இந்த உச்சி வேளையில் அகோர பசி வேறு எடுத்திருக்க, பையைத் திறந்துப் பார்த்தவளுக்கு ஏமாற்றமே காத்திருந்ததில் அவளது அழகிய முகம் வாடி வதங்கியது.

"சரியான லூசு துர்கா நீ.. பை கனமில்லாம இருக்கேன்னு கூடவா பார்க்க மாட்ட.. சே. இப்ப என்ன பண்ணப் போற? பசி வயித்தைக் கிள்ளுதே.. காலையில் சாப்பிட்டுட்டு போ-ன்னு அம்மா அந்தக்கத்து கத்துனாங்க, கேட்டியா? நேரமாகிடுச்சுன்னு ஓடி வந்த. இப்பப் பாரு.. பசியில் மயக்கம் போட்டுத்தான் விழப்போற.”

மாநிறத்திற்கும் சற்றுக் கூடுதலான கோதுமை நிறத்தில் பிறந்து இருந்தவளுக்கு இப்பொழுது அழுகையின் காரணமாய் முகம் சிவக்கத் துவங்கியது.

வயிற்றைப் பிடித்தவளாய் பசியின் வேதனையில் கண்கள் கலங்குவதை ஒருவருக்கும் காட்ட விரும்பாது மெள்ள, ஆயினும் தோழிகள் பார்த்திடாத அளவிற்கு எழுந்தவள் கோவிலைச் சுற்றிப் பார்ப்பது போன்ற பாவணையுடன் நடந்து கொண்டிருக்க, "ஹாய்.." என்ற குரலில் சட்டெனத் திரும்பிப் பார்த்தாள்.

"ஐ ஆம் சிதாரா. நாங்க மும்பையில் இருந்து வந்திருக்கோம். உன் பேர் என்ன? நீங்க எல்லாம் எங்க இருந்து வந்திருக்கீங்க?"

தனக்குப் பின்னால் சில அடிகள் இடைவெளியில் நின்றிருந்த சிதாராவைப் பார்த்ததும் வயிற்றைக் கிள்ளிய பசி கூடப் பறந்து போனது போல் புன்னகை வந்தது, பத்து வயது துர்காவிற்கு.

"என் பேர் துர்க ரூபினி.. துர்கான்னு கூப்பிடுவாங்க.. நாங்க மல்லியக்குறிச்சியில் இருந்து வந்திருக்கோம்."

“ம.. மல்.. மல்லியக்குறிச்சியா?”

“ஆமா. சேலத்துல இருக்கு..”

"Oh! Which grade are you in?"

அவளின் ஸ்டையிலான உச்சரிப்பில் வெளிவந்த வார்த்தைகள் மல்லியக்குறிச்சி கிராமத்தில் அரசுப்பள்ளிக்கூடத்தில் தமிழ் வழிப் பாடச்சாலையில் படித்துக் கொண்டிருந்த துர்காவிற்குப் புரிந்தும் புரியாமலுமாக இருந்தது.

திருதிருவென்று விழித்தவளைக் கண்டு அழகிய இளநகையைச் சிந்திய சிதாரா, "நீ எந்தக் கிரேட்? ஐ மீன் எந்தக் கிளாஸ் படிக்கிறன்னுக் கேட்டேன்." என்றாள் இன்னும் ஓரடி துர்காவை நெருங்கி வந்து நின்றவளாக.

"ஓ அதைக் கேட்டிங்களா? நான் அஞ்சாவது..” என்றவள் சற்று நிறுத்தி, “ஃபிஃப்த் ஸ்டான்டர்ட் படிக்கிறேன்.. நீங்க?" என்றாள்.

"நான் எயிட்த் க்ரேட் படிக்கின்றேன்.."

"நீங்க மும்பையில் இருந்து வந்திருக்கீங்கன்னு சொன்னீங்க, அது ரொம்பத் தூரம் தானே?"

"ஆமா ரொம்பத் தூரம் தான். எங்க அப்பாவுக்குத் தந்தாவூருன்னா ரொம்பப் பிடிக்குமாம். சின்ன வயசிலே இருந்தே இங்க வளர்ந்திருந்ததால தஞ்சாவூரைப் பத்தி நான் தெரிஞ்சிக்கனும்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. அப்பத்தான் எங்க ஸ்கூலில் தமிழ்நாட்டில் இருக்கிற கோவில்களைப் பார்க்கிறதுக்குன்னு ஒரு டூர் ப்ளான் பண்ணினாங்க. முதலில் அது ரொம்பத் தூரம், போகாதன்னு அம்மா சொன்னாங்கத்தான்..

ஆனால் நான் இதுவரை எந்த ஸ்கூல் டூரையும் மிஸ் பண்ணியதே இல்லையா? அதான் எவ்வளவு தூரமானாலும் நான் போவேன்னு அடம்பிடிச்சேன். என் அப்பாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். நான் ஒரே பொண்ணாச்சா? கூடப் பிறந்தவங்க வேற யாரும் இல்லையா? அதுவும் இல்லாம எங்க அம்மா அப்பாவுக்கு மேரேஜ் ஆகி ரொம்ப வருஷம் கழிச்சு தான் நான் பிறந்தேனாம், அதனால் நான் ரொம்பச் செல்லம் வேற. அவர் சொல்ற எதையும் நான் தட்டிக்கழிக்க மாட்டேன். அவருக்குப் பிடிச்சா எனக்குப் பிடிக்காட்டியும் அதை நான் செய்வேன். அது எதுவானாலும் சரி. அதே மாதிரி அவருக்குப் பிடிக்காட்டியும் எனக்குப் பிடிச்சா அவர் செய்வார். அதுவும் எதுவா இருந்தாலும்.

இதுல அவருக்குப் பிடிச்ச தஞ்சாவூரும் அந்த டூர் லிஸ்டில் இருக்குன்னு சொன்னேன். அதனால் இந்த டூருக்கு நான் போயே தீருவேன்னு பிடிவாதம் பிடிச்சதும் எனக்காக என் அம்மாவைக் கன்வின்ஸ் பண்ணி ஒத்துக்க வச்சார். So, I am here.."

தனது ஒற்றைக் கேள்விக்கு இவ்வளவு பெரிய பதிலை வெண்பற்கள் தெரிய அழகாய் சிரித்தவாறே கூறுபவளின் தெய்வீகத் தோற்றத்தில், சற்றும் முன் கோவிலில் பார்த்த பெரியநாயகி அம்மனின் சாயல் தெரிந்ததில் அவளின் எழிலில் இலயித்துப் போனாள் சின்னவள்.

“ஹப்பா, நான் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன். இவ்வளவு பெரிய பதிலை சொல்லிட்டீங்க.”

“ம்ப்ச். நான் எப்பவும் அப்படித்தான். நிறையப் பேசுவேன்.”

"ஆனால் நீங்க ரொம்ப அழகா இருக்குறீங்க. அதுவும் நீங்க சிரிக்கும் போது ரொம்ப.. ரொம்பவே அழகா இருக்கீங்க..'

"நானா?" என்றவளாய் இன்னும் அதிகமாய்ச் சிரித்த சிதாரா சௌஹான், "நான் ஒன்னு சொல்லட்டுமா?" என்றாள் இலேசாகத் தலையைச் சரித்து.

"ம்ம்ம்.. சொல்லுங்க.."

"கோவிலுக்குள்ள நாங்க எல்லாம் நுழைஞ்சதுமே ஃபர்ஸ்ட் எங்க கண்ணுக்குப் பட்டது நீங்க தான்.. ஐ மீன் உங்க ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் தான்.. ஓ, எங்களைப் போல ஸ்கூல் டூர் வந்திருப்பாங்கப் போலன்னு நினைச்சுப் பார்த்துட்டு இருந்தப்ப தான் நீ என் கண்ணில் பட்ட. உன் ஃப்ரண்ட்ஸ்கிட்ட சிரிச்சிட்டே பேசிட்டு இருந்த. ஒரு நிமிஷம் என் கண்ணை எங்கேயும் திருப்ப முடியலை எனக்கு. அவ்வளவு அழகா இருந்தது உன் முகம். அதுவும் உன் பெரிய கண்ணும், இந்தப் பிக் ஐலேஷஷும் [big eyelashes], உன் சிரிப்பும். என்னடா இந்தப் பொண்ணு இவ்வளவு அழகா இருக்குன்னு நான் நினைச்சிட்டு இருக்கும்போது நீ என்னைப் பார்த்து சிரிச்ச.. I really really liked you."

அவள் கூற கூற துர்காவிற்கு மயிற்கூச்செறிந்தது.

"ஆமா, நீங்க வட நாடுன்னு சொல்றீங்க? எப்படி இவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்க?"

அவளின் கேள்வியில் சிரித்தவள்,

"எங்க தாத்தா, அதாவது எங்க அப்பாவோட அப்பா வாழ்ந்தது எல்லாம் இங்க தஞ்சாவூரில் தானாம். எங்க அப்பாவும் இங்க இருக்கிற ராஜா செர்ஃபோஜி காலேஜில் தான் படிச்சாங்களாம். தாத்தா இறந்ததற்குப் பிறகு எங்க அப்பா மும்பைக்குப் போனாங்களாம். அங்க தான் எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மேரேஜ் ஆனுச்சுன்னு சொல்வாங்க.

எங்க அப்பாவும் அம்மாவும் எப்பவுமே ரொம்பப் பிஸி, அதனால் நான் பிறந்ததுமே என்னை வளர்க்கிறதுக்கு ஒரு நானியைக் [nanny/செவிலித்தாய்] கூட்டிட்டு வந்தாங்க. அம்மா ஹிந்தி, ராஜஸ்தானி, மராத்தி எல்லாம் பேசுவாங்க. ஆனால் எங்க அப்பாவுக்கு எப்பவுமே நான் தமிழும் கத்துக்கணும்னு ஆசை. அதனால் என்னைப் பார்த்துக்க வரும் நானிக்குத் தமிழ் தெரியனும்னு அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்திருக்காங்க.

அதே மாதிரி என்னுடைய நானி மும்பையில் தான் வசித்தாலும் அவங்களுடைய தாய்மொழி தமிழ். சின்னக் குழந்தைகளுக்கு முடிஞ்சவரை நிறைய மொழிகளைக் கத்துக் கொடுக்கிறது நல்லது, அது அவங்க வாழ்க்கையில் பல விதத்துல உதவும்னு என் அப்பா சொல்வாங்க. அதனால் என்னுடைய நானி எனக்குத் தமிழ் கத்துக் கொடுத்தாங்க. அம்மா ஹிந்தி மராத்தின்னு எந்த லேங்வேஜில் பேசினாலும் நான் அவங்கக்கூடத் தமிழில் மட்டும் தான் பேசுவேன், ஸோ, எனக்குத் தமிழ் நல்லா வரும்." என்றாள் வெள்ளை மனம் துள்ள.

“ஓ..” என்று மட்டுமே சொல்ல முடிந்தது துர்காவிற்கு.

“நீ லஞ் சாப்பிடலை தானே?”

“அ.. அது?”

“இட்ஸ் ஒகே. எனக்கு என் அம்மா எப்பவும் லஞ்ச், ஸ்னேக்ஸ் அப்படின்னு நிறையப் பேக் [pack] பண்ணித் தருவாங்க. சொல்லப்போனால் என் பேக் [bag] முழுக்க அது தான் இருக்கும். நான் ஆரம்பத்தில் இருந்தே உன்னைப் பார்த்துட்டே வந்தேன்னா, அப்பத்தான் கவனிச்சேன். சரி இந்தப் பொண்ணு லஞ்ச்சை மறந்துட்டு வந்துருச்சு போலருக்குன்னு யோசிச்சிட்டே தான் உன்னை ஃபாலோ பண்ணி வந்தேன். இந்தா, சாப்பிடு..”

கூறியவளாய் துர்கா மறுக்க மறுக்க வலுக்கட்டாயமாய்த் துர்காவின் கரங்களில் உணவுப் பொட்டலத்தைத் திணித்த சிதாரா, மனதிற்கினிய தோழியாய் அவளின் இளம் நெஞ்சினில் பதிந்துப் போனாள்.

இந்தியாவின் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றான பெருவுடையார் கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்று துவங்கிய நட்பே அது.

சிதாரா தன் அலைபேசி எண்ணை துர்காவிடம் கொடுக்க, அன்னையின் அலைபேசி மூலம் சிதாராவை துர்கா தொடர்பு கொண்டிருக்க, வளர்ந்தப் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் அலைபேசியிலும் வாட்சப்பிலும் தங்களின் ஸ்நேகத்தைத் தொடரச் செய்திருந்தனர்.

அதே நட்பின் பொருட்டுத் தன் திருமணத்திற்கும் தொலைதூரத் தோழியைத் துர்கா அழைத்திருத்தாள்.

அவள் யாரை மணமுடிக்கப் போகின்றாள் என்பதை அறிந்திருந்தும் தோழியின் அன்பான வேண்டுகோளின் பேரில் மும்பையில் இருந்து கிளம்பி வந்திருந்த சிதாரா, தான் எத்தகைய காட்சியை அங்குக் காணப் போகின்றோம், இன்றைய நாள் தன் வாழ்கையின் பாதையையே எப்படி மாற்றப் போகின்றது என்பதை எள்ளளவும் அறியாது மணமண்டபத்தில் பாங்காக அமர்ந்திருந்தாள்.

********************************

திருமண மண்டபத்தினைச் சுற்றிலும் அழகுக்காக வளர்க்கப்பட்டிருக்கும் க்ரோட்டன்ஸ் செடிகளுக்கும் மலர் செடிகளுக்கும் பின்னால் வரிசையாக அதே சமயம் அகன்று விரிந்து பல ஆண்டுகளாக வளர்ந்திருந்தன அவ்விருட்ஷங்கள்.

அவற்றுக்கு இடையில் மிதமான வேகத்தில் மரங்களுக்கு நடுவில் தன்னைச் சொருகி மறைத்துக் கொள்வது போல் வந்து நின்றது அந்தக் கருப்பு நிற ரேஞ்ச் ரோவர்.

அதனில் பயணிகளின் இருக்கையில் அமர்ந்திருந்தவன் திருமண மண்டபத்தைத் தன் ஆழ்ந்தக் கண்களால் பார்த்தவாறே சட்டையின் உட்புற பாக்கெட்டில் வைத்திருந்த கருப்பு நிற முககவசத்தை [Mask] எடுத்தவன் கண்கள் இரண்டு மட்டும் தெரியும் அளவிற்கு அணிந்தவாறே வெகு நிதானமாய் வாகனத்தை விட்டு கீழே இறங்கினான்.

ஆங்காங்கு பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த, எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்களானாலும் அசாத்திய திறமைகளும், வலுவான தேகமும் கொண்டிருந்த ஷிவ நந்தனின் நண்பர்களில் பெரும்பாலானோரைக் இப்பொழுது காணவில்லை.

வேட்டையாடும் அரிமாவென உள்ளம் புகைந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாது அமைதியாகத் தன் ஆறடி மூன்றங்குல உயரத்திற்கு ஏற்ற கம்பீரத்துடன் நடந்தவன் மண்டபத்தை நெருங்கும் நேரம், மீதம் இருந்த ஷிவ நந்தனின் நண்பர்கள், அஷோக் உட்பட, கரங்களும் கால்களும் கட்டப்பட்டு, வாயும் மூடப்பட்ட நிலையில் மற்றுமொரு வாகனத்திற்குள் வலுக்கட்டாயமாகப் புகுத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆக, ஷிவ நந்தன் எதிர்பார்த்தது போன்ற அசம்பாவிதம் ஆரம்பானது.

"ம்ப்ச், எங்கப் போனான் இந்த அஷோக்? அவனைத் தான் காணோம்னா மற்றவர்கள் எல்லாம் எங்க?"

சிறிது சத்தமாகவே சலித்துக் கொண்டவனை நிமிர்ந்துப் பார்த்த துர்கா, "என்ன மாமா?" எனவும், "ஒன்னுமில்லை.." என்றவனாய் மண்டபத்தின் வாயில்களின் மீதே பார்வையைச் செலுத்த, அதற்குள் சபையோரின் ஆசிர் பெற்ற திரு மாங்கல்யம் வைக்கப்பட்டிருந்த தாம்பூலமும் மணமேடைக்கு வந்து சேர்ந்தது.

தனக்கு முன்னால் தகதகவென எரிந்து கொண்டிருக்கும் ஹோமத்தை கண்ணிமைக்காது விநாடிகள் சில பார்த்த ஷிவ நந்தன் என்ன நினைத்தானோ மெள்ள துர்காவை நோக்கிச் சாய்ந்தவன்,

"துர்கா, இந்தக் கல்யாணத்தில எந்தப் பிரச்சனையும் வராது. ஒரு வேளை அப்படி எதுவும் நடந்தாலும் பயப்படாத, நான் இருக்கேன்..” என்று கூறியதுமே திடுக்கிட்டதில் அது வரை இருந்து வந்த பெண்ணவளின் நிம்மதி காணாமல் போனது.

"மாமா.."

அதிர்ச்சியில் சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தவளாய் வெளி வராத குரலில் அழைக்க, ஆழ இழுத்து மூச்சினைவிட்டுத் தன்னைச் சமன்படுத்தியவன், சபையோர்களிடம் உயர்த்திக் காட்டிவிட்டுத் தன்னிடம் ஐயர் நீட்டிய தாலியை வாங்கும் நேரம், அவன் எதிர்பார்த்த அந்த அமங்கலமான சம்பவம் அரங்கமேறத் துவங்கியது.

அத்திருமண மண்டபத்தின் முகப்பில் பெரு வாயில் இருக்க, மண்டபத்தின் இடப்புறமும் வலப்புறமும் மற்றும் பின்புறமுமாய் மொத்தம் மூன்று வாயில்கள் இருந்தன.

அதனை ஏற்கனவே நன்கு அறிந்திருந்தவனாய், வெகு சாதுரியத்துடன் திட்டமிட்டு மண்டபத்தின் ஒரு பக்க வாயில் வழியாக நுழைந்த பதினைந்து பேர் அடங்கிய கூட்டத்தில் நடுநாயகமாய், கருப்பு நிற முகக் கவசம் அணிந்து அட்டகாசமான தோரணையுடன், திடகாத்திரமான தேகத்துடன் உள் நுழைந்தான் அவன்.

வலதுக் கரத்தில் பிஸ்டல் வைத்திருந்தவன் [SMITH WESSON 500 PISTOL] இடது கரத்தினால் முகக் கவசத்தைச் சரி செய்தவாறே மேடையை நோக்கி நடக்க, அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவனது ஆட்கள் கரங்களில் வெவ்வேறு வகையான நவீன ஆயுதங்களுடன் ஷிவ நந்தனின் குடும்பத்தினர் சிலரை பிடித்து இருந்தனர்.

அக்கணம் அந்த இளம் காவலதிகாரி பிடறியில் அடித்து உரைத்தது போல் உணர்ந்தான், பாதுகாப்பினை வலுவாய் ஏற்படுத்தாத தனது கவனக்குறைவின் அபாயமான விளைவை.

சட்டெனத் தனக்கருகில் அமர்ந்திருக்கும் துர்காவின் கையை இறுக்கப் பற்றியவனாய் எழுந்து நிற்க, அதற்குள் மணமேடையில் ஏறியிருந்த அவனது ஆட்கள் அங்கு நின்று கொண்டிருந்த ஷிவ நந்தனின் பெற்றோர் மற்றும் துர்காவின் அன்னை ஸ்ரீமதியின் கழுத்திலும் ஆயுதங்களை வைத்திருந்தனர்.

நடப்பது அனைத்தும் ஏதோ திரைப்படப் படப்பிடிப்பு போல் வேகமாய் அரங்கேறிக் கொண்டிருந்ததில் விருந்தினர் அதிர்ந்துப் பார்த்திருந்தனர் என்றால், அரண்டடித்து எழுந்த துர்கா ஷிவாவினை இறுகப் பற்றியவளாய் நெருங்கி நிற்கும் நேரம், நாயகனாய் அடியாட்களுக்கு மத்தியில் நின்றிருந்தவன் மேடை ஏறினான்.

'இவன்?’

அவன் யார் என்று ஷிவ நந்தன் யூகிப்பதற்குள் மணமக்களை நெருங்கியிருந்தான் அவன்.

"என்ன ஷிவா? எப்படியும் நான் உன்னைத் தேடி வருவேன்னு உனக்குத் தெரியும். தெரிஞ்சிருந்தும் இப்படிக் கவனக்குறைவா இருக்கலாமா? உன் கவனக்குறைவால் இப்போ பாரு, தி ஃபேமஸ் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், 83 குற்றாவளிகளைக் கொஞ்சம் கூடப் பயமே இல்லாமல் சுட்டுக் கொன்ற யங் போலிஸ் ஆஃபிஸர், அவர் கல்யாணத்தைக் கூட ஒழுங்கா நடத்த முடியாமல் போயிடுச்சுங்கிற அவப்பெயர் உனக்கு வந்துடுச்சே."

வெகு நக்கலாய் கூறியவாறே தன் கரத்தில் பிடித்திருக்கும் பிஸ்டலை மெள்ள உயர்த்தியவனாய் மேலும் ஷிவாவை நெருங்கியவனின் கண்கள் நிதானமாய்த் துர்காவின் புறம் நோக்கின.

பளபளத்துச் சிலும்பியிருக்கும் முடிகள் சில முன்னுச்சியில் இருந்து முகத்தில் விழுந்தாலும், அதனை இலாவகமாய் அவனது இடது கரம் ஒதுக்க, கழுகு போன்ற பார்வையால் ஷிவ நந்தனை நெருங்கி ஒட்டியவாறே நடுக்கத்துடன் நிற்கும் தன்னைப் பார்த்தவாறே கூறியவனின் தோரணை துர்காவின் ஈரக்குலையை நடுக்கியது.

தன் திருமணத்தைத் தடை செய்ய இவனது ஆட்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்திருந்ததில், இங்குத் தன் அடியாட்களை மட்டும் தான் இவன் அனுப்பியிருக்கின்றான் என்று விநாடிகள் சிலவற்றுக்கு முன் நினைத்திருக்க, இப்பொழுது தன்னிடம் பேசியவனின் கூர்மையான கண்களும், கணீரென்ற குரலும் அவன் யார் என்று உறுதிப்படுத்தியதில் ஷிவா நந்தனின் நாடி நரம்புகள் அனைத்துமே கோபத்தில் புடைத்தன.

எப்படியும் இவனைச் சந்திப்போம் என்று எதிர்பார்த்திருந்தாலும் இவன் நேராகவே, அதுவும் தனது திருமணத்தன்று மண்டபத்திற்கே வருவான் என்று ஷிவ நந்தன் சிறிதளவும் யூகித்திருக்கவில்லை.

அவனது மனம் எண்ணியது புரிந்தது போல், "என்ன ஷிவா? நான் இப்படி நேரிடையாவே வருவேன், அதுவும் உன் மேரேஜ் ஃபக்ஷனிற்கே வருவேன்னு நீ எதிர்ப்பார்க்கலையோ? அதான் இந்த ஷாக்கா?" என்றான் அழுத்தமான தொனியில்.

"வேண்டாம், அவங்களை விட்டுடச் சொல்லு. அவங்கள்ல ஒருத்தருக்கு ஏதாவது ஆனாலும் உன்னால உயிருடன் இங்கே இருந்து போக முடியாது."

ஆங்காரம் தெறிக்கப் பற்களைக் கடித்துக் கொண்டே ஷிவ நந்தன் கூற, தனது உயரத்திற்கு ஈடாக நின்றுக் கொண்டிருப்பவனின் கண்களை ஆழ்ந்துப் பார்த்தவனாய்,

"உன்னால் என்னை ஒண்ணும் செய்ய முடியாது ஷிவா. காரணம் உனக்குப் பிடிச்சவங்க எல்லாரும் இப்ப எங்க கண்ட்ரோலில் இருக்காங்க. நீ இங்க இருக்கிறவங்களை, ஐ மீன் இந்த மண்டபத்துக்குள்ள இருக்கிறவங்களை மட்டும் தான் பார்க்கிற.. ஆனால் மண்டபத்திற்கு வெளியேயும் உனக்குப் பிடிச்சவங்க இருந்தாங்களே, அவங்களும் இப்போ எங்க கையில். பாவம் தாலிக்கட்டுற சமயம் மண்டபத்துக்குள்ள இல்லாமல் உனக்காகச் செக்யூரிட்டி வேலை செஞ்சிட்டிருந்த உன் ஃப்ரெண்ட்ஸை தான் சொல்றேன், இன்க்ளூடிங் அஷோக். ஸோ, நான் சொல்றதை நீ அமைதியா கேட்டுட்டு இருந்தீன்னா அவங்க எல்லாருமே எந்த வித ஆபத்தும் இல்லாம விடுவிக்கப்படுவாங்க." என்றான் ஆளுமைக் கலந்தக் குரலில்.

'அவர்களின் உயிருக்கு ஆபத்து வந்துவிட்டால் அதற்குக் காரணம் நான் மட்டுமே..சே.. என்னுடைய ஒரு சிறு கவனக்குறைவால் எவ்வளவு பெரிய ஆபத்து அவர்களுக்கு.'

ஷிவ நந்தனின் மனம் வருந்தியது.

ஆயினும் வருத்தப்படும் நேரம் இது இல்லை என்பதனையும் உணர்ந்தவனாய் தனது வலிய உடலுக்குள் புதைந்துவிடும் அளவிற்கு நின்று கொண்டிருக்கும் துர்காவின் கரத்தை மேலும் அழுந்த பற்றியவன் அவளை இழுத்துத் தனக்குப் பின்னால் நிறுத்திய கணம் தான் புத்தி உரைத்தது, சற்று முன் அவனுக்குக் கேட்ட சத்தத்தின் அர்த்தம்.

மண்டபத்தினுள் அதிசயமாய் நுழைந்த சிதாரா சௌஹானின் மீது கவனம் சென்றதில் தொலைவில் கேட்ட சத்தத்தை உதாசீனப்படுத்தியது எப்பேற்பட்ட முட்டாள்தனம் என்று தாமதமாய் உணர்ந்தான் அந்த இளம் காவலதிகாரி.

அது ஹெலிகாப்டரின் சத்தம்!!!!

அப்படி என்றால் இவன் திட்டம்?

மடமடவெனப் புத்தி கணிக்கத் துவங்க, சுற்றி நிற்கும் சுற்றங்களையும் குறிப்பாகப் பெற்றவர்களையும் பார்த்தவன், "சரி, உனக்கு நான் தானே வேணும். உன் ஹெலிகாப்டர் எங்க இருக்குன்னு சொல்லு. நானே வரேன். இவங்க எல்லாரையும் விடச் சொல்லு." என்றான் அமைதியாய்.

முகக் கவசத்திற்குப் பின் இருக்கும் அழுத்தமான உதடுகள் புன்னகையில் விரிந்ததோ என்னவோ, ஆனால் அதுவரை நெருப்பு போல் காந்திக் கொண்டிருந்த அவனது ஆழ்ந்து ஆராயும் பார்வையில் இப்பொழுது சிரிப்புத் தெரிந்தது.

பதிலேதும் கூறாது தனக்கு அருகில் நிற்கும் தன் ஆட்களில் ஒருவனைக் கண்டு பிஸ்டலினால் சைகை செய்ய, விநாடிக்குள் ஷிவ நந்தனின் அருகில் வந்த அந்த அடியாள் அவனது தலைக்குப் பின் தன் கைத்துப்பாக்கியை [Handgun] வைக்க, வெகு நிதானமாய் ஷிவ நந்தனை நெருங்கியவன், விழிகளில் நீர்த்திரள நடுங்கும் மேனியுடன் நிற்கும் துர்காவின் கையைப் பற்றினான்.

காவல்துறையின் இத்தனை பெரிய உயரிய பதவியில் இருந்தும் தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று பொருமிய ஷிவ நந்தனின் கரங்கள் வலுக்கட்டாயமாய் இறுக்கக் கட்டப்பட, வந்தவனது அடி ஆட்கள், மேடையை விட்டு கீழே இறங்குமாறு ஷிவ நந்தனின் உறவினர்களுக்கு உறுமும் குரலில் கட்டளையிட்டுக் கொண்டிருந்தனர்.

தன் கையறுநிலையை நொந்தவனாக அவர்களைப் பார்த்த ஷிவாவின் கண்ணெதிரிலேயே துர்காவின் கரத்தை இறுக்கப் பற்றியவனாக மணமேடையை விட்டு கீழிறங்கியவனின் அகன்ற முதுகைத் துளைத்தது ஷிவாவின் கூர்மையான பார்வை.

அடிபட்ட அரிமாவின் மூச்சு காற்று அதன் கர்ஜனையை விடப் பயங்கரமாக இருக்கும் என்பது போல், தன் அத்தை மகளை இறுக்கப் பற்றியவனாய் மேடையை விட்டு கீழே இறங்கிக் கொண்டிருப்பவனை வேக மூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஷிவ நந்தன்

ஆயினும் செய்வதற்கு அங்கு ஒன்றும் இல்லை.

ஷிவ நந்தனைத் திரும்பியும் பாராது, தன்னிடம் இருந்து விடுபடப் போராடும் துர்காவின் இடைப்பற்றி இழுத்து தனக்குள் இறுத்திக் கொண்டவனாக அவளது கழுத்தில் தனது பிஸ்டலை அழுத்திப் பற்றியவாறே விடுவிடுவென்று நடந்தவன் வாயிலை நெருங்கியதும் வெளியேறும் முன் ஒரு விநாடி நின்று நிதானமாகத் திரும்பிப் பார்த்தான்.

"The quality of decision is like the well-timed swoop of a falcon which enables it to strike and destroy its victim. I mean this is my strategy, when it comes to war. It doesn't matter if it is a business or personal. உன்னை முதன் முதலில் சந்திச்ச அன்னைக்கு நான் சொன்னது.. அதை நீ மறந்துருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். நான் உன்னை வேறு ஏதாவது விதத்தில் பழி எடுப்பேன்னு நீ நினைச்சிருக்கலாம். ஆனால் எதிர்பார்க்காத தருணத்தில், அவன் எதிர்பாரா வியூகத்தில் எதிரியை அழிப்பதும் யுத்தத்தின் தர்மம் தானே. Strike an enemy once and for all. Let him cease to exist or he will live to fly in your throat again. இனி நீ எழுந்திருக்கவே கூடாது ஷிவா.”

கூறியவன் திருமண மண்டபத்தை விட்டு வெளியேற, நடந்து முடிந்திருந்த களேபரங்களினால் அதிர்ந்து நின்றிருந்தது ஷிவ நந்தனும் அவர்களின் உறவினர்கள் மட்டுமல்ல, விருந்தினர்களின் கூட்டத்திற்குள் நின்றிருந்த சிதாரா சௌஹானும் தான்.

இரு மாதங்களுக்கு முன் தனது நிச்சயதார்த்த விழாவில் அதிரடியாக நுழைந்த ஷிவ நந்தனின் மீது கோபம் இருந்தாலும், சிறு வயது முதலே நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அலைபேசியில் தன்னை அழைத்து அன்புடன் அளவளாவி கொண்டிருக்கும் அழகிய நண்பி துர்காவுக்காக அவளது திருமணத்திற்கு வந்திருந்த அவளது சிறு வயது தோழி.

அதிர்ச்சியுடன் கால்கள் தூண்களைப் போன்று இறுகியதில் ஸ்தம்பித்து நின்றவளை கவனிக்கத் தவறினான், துர்காவை தன்னுடன் தூக்கிச் செல்வதே தன் முதன்மையான குறிக்கோள் என்று வந்திருந்தவன்.

'இது? வருண்.. வருண் தேஸாய்..’

புத்தி இதனையே நினைத்துக் கொண்டிருக்க, ஏற்கனவே மனம் குமுற நின்றிருந்தவளை, அணிந்திருந்த பட்டு வேஷ்டியை மடித்துக் கட்டியவாறே மணமேடையில் இருந்து கீழே ஆக்ரோஷமாய்க் குதித்திறங்கிய ஷிவ நந்தனின் அதிரடி மேலும் அரளச் செய்ய, நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தாள்.

அனைவரின் மனமும் இன்னும் நம்ப முடியாது கலங்கிக் கொண்டிருக்க, அதற்குள் மண்டபத்தை விட்டு வெளியேறியிருந்த ஷிவ நந்தனின் பார்வை வட்டத்தில் பதிந்தது, சற்றுத் தொலைவில் வானில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த ஹெலிகாப்டர்

******************************************

ஏறக்குறைய இரு மாதங்களுக்கு முன்..

வருண் தேஸாய்க்குச் சொந்தமான வங்கி ‘VNDESAI Bank’ மற்றும் நிறுவனம் ‘VNDSI Ltd’.

ஒரு கட்டத்தில் இந்திய தேசம் கடனில் மூழ்கியிருந்த சமயம், மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரிகளும் அதிகமாயிருக்க, அத்தருணம் வருண் தேஸாயின் பணவியல் மற்றும் பொருளாதார யோசனைகளுக்குக் கீழ்படியத் தயாராக இருந்தனர் சில அரசியல்வாதிகள், ஆர்ய விக்னேஷ், முகேஷ் சௌஹான் உட்பட.

அவர்களைத் தன் வலைக்குள் போட்டுக் கொண்டதன் மூலம் அரசாங்கத்தையும் தன் கைக்குள் அகப்படுத்திக் கொள்ளத் துவங்கிய வருண் தேஸாயின் வயது அப்பொழுது இருபத்தி நான்கு.

‘VNDESAI Bank’ என்ற பெயரில் தனியார் வங்கி ஒன்றினைத் துவங்கியிருந்தவன் அதன் மூலம் அரசாங்கத்தின் அனுமதியுடன் கடனுறுதிச் சீட்டுகளையும் வழங்க ஆரம்பித்திருந்தான்.

அதனைப் போலவே அரசாங்கத்தின் அனுமதியுடன், ஐரோப்பா, சீனா மற்றும் இன்னும் சில பிற நாடுகளுடன் இணைந்து வணிகம் செய்வதற்கான நிறுவனங்களையும் துவங்கினான்.

ஆனால் இவற்றை எல்லாம் மிஞ்சிவிடும் அளவிற்கான அவனது திட்டத்தின் முதல் படியே VNDSI Ltd.

முதல் ஆவணப்படுத்தப்பட்ட நிதி ஊழல்களில் ஒன்று, மிசிசிப்பிக் குமிழி என்பதாகும். ஸ்காட்டிஷ் பொருளாதார நிபுணரையும், பிரெஞ்சு பொருளாதாரத்தையும் மற்றும் காகித நாணயத்தை முதலில் வெளியிட்ட வங்கி ஒன்றினையும் இணைத்த, நிதி வரலாற்றில் மிக விசித்திரமான கதைகளில் ஒன்றானது மிசிசிப்பிக் குமிழி.

பிரான்சில் ரீஜண்டாகச் செயல்பட்ட ஆர்லியன்ஸ் டியூக், சில காரணங்களால், இங்கிலாந்தில் இருந்து தப்பியோடிய ‘ஜான் லா’- வை நிதி அமைச்சராக நியமித்தார். பிரான்சின் பொருளாதாரம் கடனால் முடங்கியிருந்த நேரம் அது. அதைச் சரி செய்ய முயற்சிக்கும் அதிகாரம் ஜான் லாவுக்கு வழங்கப்பட்டது.

அவர் பின்பற்றிய தீர்வுகளில் ஒன்றே வருண் தேஸாயின் விஸ்வரூப வளர்ச்சிக்கு காரணமானது.

அரசுக்கு வருவாயை ஈட்டுவதற்காக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு விற்பனையாளர் அல்லது தயாரிப்பாளரைக் கொண்ட சந்தைக் கட்டமைப்புகளை உருவாக்குவதே அத்திட்டம்.

மிகுந்த புகழ்பெற்ற, செல்வாக்கான அரசியல்வாதி ஒருவரின் மருமகனுடன் ஏற்பட்ட பழக்கத்தைக் கொண்டு இந்தியாவின் பொருளாதார முடக்கத்தைச் சரி செய்யும் அதிகாரத்தைத் தன் கையில் வெகு சாமர்த்தியமாய் எடுத்துக் கொண்டான் வருண் தேஸாய்.

அக்கணம் அவன் பின்பற்றிய தீர்வுகளில் ஒன்று, அரசுக்கு வருவாயை ஈட்டுவதற்காக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தைக் கட்டமைப்புகளை [ஒரு பண்டம் அல்லது சேவையின் விநியோகம் அல்லது வர்த்தகத்தின் பிரத்தியேக உடைமை ] அமைப்பதாகும்.

அதுவே VNDSI Ltd நிறுவனம். இது மகாராஷ்டிராவில் உள்ள வர்த்தக நிறுவனங்களை ஒரே நிறுவனமாக ஒருங்கிணைக்கும். இதனில் முதலில் குறைவான பங்குகளை வெளியிட்ட வருண் தேஸாய் பங்கு விலையில் 15%க்கு சமமான வைப்புத்தொகையை மட்டுமே முதலீட்டாளர்கள் வைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தான். அதன் பிறகு பங்குகளை வாங்க மக்கள் குவிந்தனர்.

அதனைத் தொடர்ந்து மேலும் பல இலட்சத்திற்குப் பங்குகளை வெளியிட்டது VNDSI Ltd நிறுவனம். சில மாதங்களிலேயே பங்கின் விலையை அடிமட்டத்திலிருந்து வெகுவாய் உயர்த்தினான் வருண் தேஸாய். இதனில் பற்பல கோடிப் பணத்தை அவனால் எளிதாகத் திரட்ட முடிந்தது. அதில் பெருந்தொகையை இந்திய அரசாங்கத்திற்குக் கடனாகக் கொடுக்கவும் முடிந்தது.

இந்தப் பங்குகளை VNDESAI Bank என்ற அவனுக்குச் சொந்தமான வங்கியில் இருந்து வங்கி நோட்டுகளாகச் செலுத்தலாம் என்றும் வலியுறுத்தினான்.

வருண் தேஸாயின் பேரரசு விரிவடைந்ததால் VNDSI Ltd நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு வியத்தகு அளவில் உயர்ந்தது. ஒரு வருடத்திற்குள் 2500% பங்குகள் அதிகரித்தன.

ஆயினும் VNDSI Ltd நிறுவனம் வருண் தேஸாய் உருவாக்கவிருந்த மிகப் பெரிய சாம்ராஜ்யத்தின் ஒரு சிறிய பகுதியே.

ஆக, இவை அனைத்துக்குமே துணைப் போனது அரசியல்.

முன்பின் அறியாத, ஆனால் வாழ்க்கையில் மிகுந்த உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும், குறிப்பாக அரசியலில். அதற்குத் தான் தேர்ந்தெடுக்கும் பாதையில் தர்மம் குறுக்கிட்டால் அதர்மத்தை சாதாரணமாய்க் கையில் எடுக்கும் துணிச்சலும், மன உறுதியும் கொண்டவன் ஆர்ய விக்னேஷ்.

அவனின் ஆதரவு வருண் தேஸாயிக்கு பெரும் தூண்களாய் இருந்தன.

ஆக வருண் தேஸாய் விரித்திருந்த சதுரங்க அட்டையில் அவனை ஜெயிக்க ஆளே இல்லை என்ற சூழ்நிலையில் தான் இடைப்புகுந்தான் SSP ஷிவ நந்தன்.

அதனில் ஷிவ நந்தன் விரித்த முதல் வலை வருண் தேஸாயின் தனியார் வங்கி.

ஆவ்கோர் நிறுவனம் துவங்கியது முதல் பல பில்லியன் யூரோக்களை VNDESAI வங்கி பணமோசடி [Money Laundering] செய்ய அனுமதித்ததைக் கண்டறிந்தான் ஷிவ நந்தன்.

கூடுதலாக, வெகுஜன பணச் சேவையைப் பயன்படுத்தி அந்த ரூபாய் நோட்டுகளை ஐரோப்பாவிற்குத் திருப்பி அனுப்பவும் அவனது வங்கி உதவி இருக்கின்றது.

ஆக இவை அனைத்தையும் ஏற்கனவே கண்டுப்பிடித்திருந்த ஷிவ நந்தன் இவற்றுக்கு மூலக் காரணமான 'AavCor' நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்ய விக்னேஷை கைது செய்தது நாம் அனைவருக்குமே தெரியும்.

ஆனால் DGP நீரவ் பிரகாஷின் தற்கொலை அதற்கு மேல் பொறுமைக் காக்க ஷிவ நந்தனை விடவில்லை.

ஆர்ய விக்னேஷுடன் இணைந்து பல மனிதர்களின் கால்களில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கும் பொம்மலாட்டக்காரனான வருண் தேஸாய் இப்பொழுது ஷிவ நந்தனின் முதன்மையான எதிரியானான்.

சக்தி, வலிமை, அதிகாரம் மற்றும் செழுமையின் சின்னமாக வலம் வந்து கொண்டிருந்த வருண் தேஸாயை அடிக்கத் தன் வேட்டையை மறைமுகமாகத் துவங்குவதில் விருப்பமில்லாமல் அவனை நேரிடையாகவே தாக்க அவன் வீட்டிற்கே வந்தான்.

அதுவும் அவனது வாழ்க்கையின் முக்கிய நாளான நிச்சயத்தார்த்த விழா அன்று.

அக்கணம் சீற்றமான அரிமாவின் வேட்டையில் வருண் தேஸாய் அவமானத்தில் வெந்து போனான்.

தன் வருங்கால மனைவி சிதாரா சௌஹானின் முன்னும், நிச்சயத்தார்த்தத்திற்கு என்று தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டிருந்த நெருங்கிய சொந்தப்பந்தங்களின் முன்னும், தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாட்டு பெரு நிறுவனங்களின் உரிமையாளர்கள் என்று அனைவரின் முன்னும் தான் கைது செய்யப்பட்டதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

உணர்வுசார் நுண்ணறிவுகளில் [Emotional Intelligence] சிறந்து விளங்குபவன் இவன் என்று தேசமே புகழும் அளவிற்கு அந்த இருபத்தி எட்டு வயதிலேயே பெயர் எடுத்திருந்தவன் வாழ்க்கையில் முதன் முறை மனதிற்குள் அவமரியாதையால் கொதித்துப் போனான்.

ஆயினும் அதனை ஒருவருக்கு முன்னும் காட்ட அவனது அந்தஸ்தும், தேசத்தையே கட்டிக் காக்குமளவிற்குப் பண உதவி செய்யும் தேஸாய் க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் CEO என்ற பதவியும் விடவில்லை.

காவல் அதிகாரிகளின் கட்டளைப்படி நிதானமாய்ச் செயல்பட்ட வருண் தேஸாய் வாகனத்தில் ஏறும் முன் ஒரு விநாடி நின்று சாவதானமாகத் திரும்பிப் பார்த்தான்.

தன்னை விட்டுச் சில அடிகள் தொலைவில் நிற்கும் ஷிவ நந்தனின் உணர்ச்சிகளற்ற முகத்தில் எதுவும் தெரியாவிட்டாலும், அவனது கண்களில் தெரிந்த வெற்றியின் மலர்ச்சியைக் கண்டவன், "Who wishes to fight must first count the cost Shiva.." என்றவாறே சற்றே புன்னகைத்தான்.

இது நாள் வரை பார்க்காதிருந்த அவனது புன்சிரிப்பின் பின் இருக்கும் விபரீத விளைவு புரியாதவனா ஷிவ நந்தன்?

‘போரிட விரும்புபவன் முதலில் செலவைக் கணக்கிட வேண்டும்’ என்று அவன் கூறுவதன் அர்த்தத்தை உணர்ந்திருந்த ஷிவ நந்தனின் உதடுகளிலும் சிரிப்புப் படர்ந்தது.

“No war begins itself Varun.. அது குருக்ஷேத்திர போராகவும் இருக்கட்டும். போர் தானாக உருவாகுவதில்லை. நாம் தான் போரை உருவாக்குகிறோம். எப்போதெல்லாம் தர்மத்தை அதர்மம் சூழுகிறதோ, நல்லோரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் [Lord Krishna] அவதரிக்கிறேன்னு பகவத் கீதையில் நீ படிச்சதில்லையா? எல்லாம் தெரிஞ்சு தான என்னுடனான யுத்தத்தை நீயும் முதலில் தொடங்கின. ஐ மீன் நேரடியா இல்லைன்னாலும் ஒரு அரசியல்வாதியின் பின்னால் நின்று மறைமுகமா என்னை இந்த யுத்தத்திற்கு இழுத்ததே நீ தானே.. அதனுடைய இழப்பைத்தான் இப்ப நீ பார்க்கிற.." என்றதில் அதுவரை இல்லாது திடுமென வருணின் முகத்தில் சிறிதே மலர்ச்சி படிந்தது.

வழக்கத்திற்கு மாறாய் புருவங்களை ஆச்சரியத்தின் விளைவு போல் சற்றே ஏற்றி இறக்கியவன் காவல்துறை வாகனத்தில் ஏறியவனாய் நன்றாய் பின்னிருக்கையில் சாய்ந்து அமர, ஏனோ அவனது மூளைக்குள் இந்த வரிகள் மீண்டும் மீண்டும் அடித்து ஓய்ந்தன.

சிறு வயது முதலே புத்தகங்களைத் தேடி தேடிப் படிப்பதில், அதுவும் கல்லூரி நாட்களில் நூலகங்களில் பற்பல நாடுகளில் வெளியான சிறப்பான புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தவன் வருண் தேஸாய்.

அன்றே படித்திருந்தான் பகவத் கீதையை.

அதே போல் அப்படியான ஓர் நாளில் அவன் விரும்பிப் படித்த புத்தகம் ஒன்றில் படித்த இவ்வாக்கியம் அவனது ஆழ்மனதில் ஆழமாய்ப் பதிந்து போயிருந்தது.

‘Let your plans be dark and impenetrable as night, and when you move, fall like a thunderbolt.’

[உங்கள் திட்டங்கள் இரவைப் போல இருட்டாகவும், ஊடுருவ முடியாததாகவும் இருக்கட்டும். நீங்கள் செயல்படும் பொழுது உங்களது அடி இடியைப் போல இருக்க வேண்டும்.]

நீ பகவத் கீதையை உதாரணமாய்ச் சொல்லலாம், ஆனால் என்னுடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் வேறு ஷிவா. அதை நீ பொறுத்திருந்துதான் பார்க்கணும்!!

அன்று காவல்துறை வாகனத்தில் அமர்ந்திருந்தவனின் உள்ளம் எண்ணியது இன்று வெளியானது!

இந்த ஷிவ நந்தனை நீ அடிக்கணும் வருண்.. ஆனால் அவனே எதிர்பாராத நேரத்தில் இடி மாதிரி விழ வேண்டும் உன் அடி.. அவன் மீது!

அன்று அவன் நினைத்தது இன்று அரங்கேறியிருந்தது!

நடந்து முடிந்திருந்த இரு அசந்தர்ப்பமான நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் இருந்தது சில மாதங்கள் இடைவெளியே.

ஆனால் இருவருக்குமே நேர்ந்தது அவர்கள் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வுகள்.

அவமானம், வருத்தம், திகைப்பு, அதிர்ச்சி என்று அனைத்துமே கலந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்ச்சிகள்.

தன்னைச் சிறைச்சாலை வரை கொண்டு சென்று, தனது குருவைப் போல் இருந்த நீரவ் பிரகாஷின் மரணத்திற்கு மறைமுகக் காரணமாக இருந்த தொழிலதிபனை அசைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தான் காவலதிகாரி ஒருவன்.

அவனது திருமண விழாவிலேயே அவன் கண்களின் முன்னேயே அவனுக்கு இன்னும் சில மணித்துளிகளில் மனைவியாகப் போகின்ற ஒருத்தியை, அவனது விருந்தினர்கள் சொந்தப்பந்தங்கள் முன் களவாடிச்சென்று, அந்தக் காவலதிகாரியின் அடித்தளத்தையே அசைக்க வேண்டும் என்று நினைத்தான் இவன்.

ஆகப் பழிக்குப் பழி!

அந்தப் பழியில் பகடைக்காயாகிப் போனவளோ, ஒன்றும் அறியாத ஒரு இளம்பெண்!

'I can't speak on behalf of the show. I'm not a creator; I'm just a pawn.'
-- Durga

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்.

References: https://sanctionscanner.com/blog/the-five-biggest-money-laundering-scandals-317
 
Last edited:
So antha teaser la Shiv ku pinnadi irukkira lady Durga illai… Sithara 🧐🧐🧐

Durga vai abduct panni marriage pannuwan la as per teaser…
She is pawam noh… 😑😑😑

As we guessed Shiv arrested Varun… 👏🏻👏🏻👏🏻
 

Vidhushini

New member
ஷிவாவின் சிறு கவனக்குறைவால் நால்வரின் வாழ்வும் திசை மாறியது...

துர்கரூபிணி - சிதாரா இருவரின் கையறு நிலையும், ஷிவா - வருண் மோதலால் நிகழ்ந்தது.

இன்னும் ஷிவா-வருண்-ஆர்யன் ஆகிய இம்மூவரின் ஆட்டத்தினால் இழப்புகள் இவர்களைச் சார்ந்தவர்களுக்கோ?

But anything can be happened with just one move of a pawn.
inbound3338212804277860079.jpg

Interesting epi @JB sis.
 
Last edited:

saru

Member
Lovely update jb
Siva ninja nimitri nera Vandana
Ana varun nee mugamooxi pottu vanda y
Vanda rit Ana chitarava gavanika Miranda Adu en
Deiii siva thala abimanuva ah irunda Kai vachiruka mydiuma room
Durga VA Kottayam Hitachi aduthu Anna Panna pora
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top